ஒருவரிடமே அதிகாரம் குவிந்தால் என்ன நடக்கும்.. ஈரான் அடக்குமுறையே சாட்சி.. ப.சிதம்பரம் அட்டாக்
டெல்லி: ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 'மாஷா அமினி' எனும் இளம் பெண் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நாடு முழுவதும் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் 'மாஷா அமினியின்' 40வது நாள் நினைவு தினத்தன்று போராட்டக்காரர்கள் மௌன அஞ்சலி ஊர்வலம் நடத்திய நிலையில் பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதற்கு ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

போராட்டம்
இஸ்லாமிய சமயநெறிகளை கராராக பின்பற்றும் நாடுகளின் பட்டியலில் ஈரானும் ஒன்று. இந்நாட்டில் பெண்கள் 9 வயது முதல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சமயநெறிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்கு காவல்துறையில் 'கலாச்சாரப் பிரிவு' ஒன்று தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் ஹிஜாப் அணிவது, தொழுகைகளை முறையாக செய்வது ஆகியவை பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிப்பார்கள். மேலும் இஸ்லாமிய மத நெறிமுறைகளை அவமதிக்கும் செயல்பாடுகளையும் கண்காணித்து அதற்கெதிரான நடவடிக்கையில் ஈடுபடுவோரை கைது செய்வார்கள்.

உயிரிழப்பு
இப்படியாக இருக்கையில் கடந்த செப்டம்பர் 13ம் தேதியன்று குர்திஸ்தானை சேர்ந்தவர் 'மாஷா அமினி' எனும் 22 வயது இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பரிசோதனை செய்த கலாச்சார காவல் குழுவினர், ஹிஜாப்பை சரியாக அணியவில்லையென்று மாஷா அமினி மீது தாக்குதல் நடத்தி கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கும் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளன. இதனையடுத்து அவர் 13ம் தேதி உயிரிழந்தார்.

அமினி
ஒவ்வொரு போராட்டத்திற்கும் ஒரு முகம் இருக்கும். அதுபோல ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தின் முகமாக அமினி உருவெடுத்தார். அமினியின் படங்களை ஏந்தி இளம்பெண்களும் பொதுமக்களும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் இந்த போராட்டங்களை ஆளும் கட்சி விரும்பாத நிலையில், இதில் பங்கேற்பவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் அமினியின் 40வது நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக அவரது சொந்த ஊரில் ஆயிரக்கணக்கான மக்கள் மௌன அஞ்சலி ஊர்வலம் நடத்தினர்.

கண்டனம்
இந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் அந்நாட்டில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. போராட்டங்கள் தீவிரமடையும் போதெல்லாம் பாதுகாப்புப் படையினர் அடக்குமுறையை பிரயோகித்து வந்தனர். இதற்கு ஐநா பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இறையாட்சி
இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், "இந்த கண்மூடித்னமான துப்பாக்கிச்சூடு சம்பவம் உலக மனசாட்சியை உலுக்க வேண்டும். ஒரு தனிநபரிடம் அதிகாரம் குவிக்கப்பட்டு சர்வாதிகார அரசு உருவானால் அந்த அரசு தனது மக்களை அடக்குவதற்கு மிருகத்தனமான சக்தியைதான் நம்பி இருக்கும். இறையாட்சியால் எதேச்சதிகாரம் மோசமாகிறது. அதுதான் இன்றைய ஈரானின் அவல நிலை" என்று கூறியுள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மதத்தை மையப்படுத்தியே இயங்கிக்கொண்டிருக்கிற நிலையில், ப.சிதம்பரத்தின் ட்வீட் இந்தியாவுக்கும் பொருந்தும் என சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது சிதம்பரத்தின் ட்வீட் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications