"இந்தியாவின் பெரிய ரசிகன்.. இணைந்து வேலை செய்ய ரெடி!" சீன தூதர் பளீச்.. கவனிக்கும் மத்திய அரசு
டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சீன தூதர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே சுமுகமான உறவு இல்லை. அதிலும் கல்வான் மோதலுக்குப் பின் நிலைமை மோசமானது.
இரு தரப்பும் கல்வான் மோதலுக்குப் பின் தொடர்ச்சியாக ராணுவத்தைக் குவித்தது. பல கட்ட ராணுவ பேச்சுவார்த்தைக்குப் பின்னரே வீரர்கள் மெல்ல விலக்கிக் கொள்ளப்பட்டனர்.
பயமில்லை..பதற்றமின்றி கோவையில் தீபாவளி கொண்டாடினார்கள்..அச்சுறுத்த வேண்டாம் - செந்தில் பாலாஜி
சீனா
சீனா 1990களுக்கு பின்னர் அடைந்த வளர்ச்சி என்பது மிகப் பெரியது. உலகின் டாப் பொருளாதாரங்களில் ஒன்றாகச் சீனா மாறியது. இப்போது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா பெரிய பொருளாதாரமாக உள்ளது. வல்லரசு நாடாக மாறும் சீனா, கடந்த சில ஆண்டுகளாகவே அண்டை நாடுகளிடம் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. தெற்கு சீனா கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரிக்க முயல்கிறது.
எல்லை
அதேபோல அண்டை நாடான இந்தியா உடனும் சீனாவும் மோதல் போக்கையே கொண்டு உள்ளது. இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா ஊடுருவ முயல்வதாகத் தொடர்ச்சியாகப் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், எல்லைப் பகுதிகளில் மிகப் பெரிய அளவில் முதலீடுகளை மேற்கொள்ளும் சீனா, அங்கு விரைவாக ராணுவம் வந்து செல்லும் வகையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இதனால் இந்திய- சீன எல்லையில் பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது.
சீன தூதர்
இந்தச் சூழலில் வங்கதேசத்துக்கான சீனத் தூதர் லீ ஜிமிங் கூறியுள்ள கருத்துகள் பலரது கவனத்தை ஈர்த்து உள்ளது. தனிப்பட்ட முறையில் தான் இந்தியாவின் மிகப் பெரிய ரசிகன் என்று குறிப்பிட்ட சீனத் தூதர் லீ ஜிமிங், அரசியல் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா எப்போதும் தயாராகவே உள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெரிய ரசிகன்
வங்கதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லீ ஜிமிங், "இந்தியாவைச் சீனா ஒரு போதும் போட்டியாக அல்லது எதிரியாகப் பார்க்கவில்லை. வங்கக் கடலில் அதிகப்படியான ஆயுதங்களை குவிக்கச் சீனா விரும்பவில்லை. தனிப்பட்ட முறையில் நான் இந்தியாவின் பெரிய ரசிகன். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்சினையை இணைந்து செயல்படுவதன் மூலம் தீர்க்க முடியும் என் நம்புகிறேன்" என்றார்.
தவிர்க்க வேண்டும்
நேற்றைய தினம் தான் இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வெய்டாங், இரு நாடுகளும் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. சீன தூதர் தனது பிரியாவிடை நிகழ்ச்சியில் "இரு தரப்பும் வேறுபாடுகளைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.. சீனா- இந்தியா உறவுகளை வேறுபாடுகளால் பெரிதுபடுத்தாமல் பேச்சுவார்த்தை மூலம் சரியான தீர்வைக் காண வேண்டும்" என்றார்.
முக்கியம்
அதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை சீன தூதர் சன் வெய்டாங்கை சந்தித்தார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சுமுகமான உறவு நிலவுவது இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும், கல்வான் மோதலுக்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சுமுகமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.