எனக்கு 50… உனக்கு 50.. மகாராஷ்டிராவில் இறுதியான பாஜக, சிவசேனா கூட்டணி.. இன்று அறிவிப்பு?
In Maharashtra, the coalition between the BJP and the Shiv Sena has come to an end and the official announcement will be released at any time.
டெல்லி:மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா இடையே கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்துவிட்டதாகவும், எந்நேரத்திலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜகவிற்கு சிவசேனா ஆதரவளித்து வந்த போதிலும், முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாஜக தமது அமைச்சரவையில் சிவசேனாவுக்கு இடமளிக்கவில்லை. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியிலும் சிவ சேனாவிற்கு எதிர்பார்த்த முக்கியத்துவம் கிடைக்கவில்லை.
இந்த காரணங்களால் பாஜக மீது சிவசேனாவிற்கு ஏற்பட்ட மனக்கசப்பு பெரும் பிளவாக உருவெடுத்து வருகிறது. இரண்டு கட்சிகளுக்கு இடையில் நடப்பது என்ன? கூட்டணி தொடருமா? என்ன மாதிரியான நிலைப்பாடு என்று தெரியாத நிலை இருந்து வந்தது.
மகாராஷ்டிராவில் நடைபெறும் பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசும் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே... நாங்கள் தான் பெரியண்ணன்... நாங்கள் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்று பாஜகவுக்கு நெருக்கடி அளித்தது. மோடியின் அதிரடியான உத்தரவின் பேரில் பாஜக, சிவசேனா இடையே நடைபெற்ற பல சுற்றுபேச்சுவார்த்தைகளிலும் முடிவு எட்டப்படவில்லை.
அதனால்.. இவ்விரு கட்சிகளுக்கும் இடையே நின்றுபோன தொடர்பு தற்காலிகமா? நிரந்தரமா? என்பது தெரியாமல் இருந்து வந்தது. இதுவரையும் சிவசேனா பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கவில்லை. அதேபோல், பாஜகவும் கூட்டணியில் இருந்து சிவசேனாவை வெளியேற்றவும் இல்லை.
இந் நிலையில் பாஜக, சிவசேனா இடையே கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், எந்நேரத்திலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக உத்தவ் தாக்கரேவை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்ட அமித் ஷா... கூட்டணி குறித்து பேசி இறுதி முடிவை எடுத்துவிட்டதாக தெரிகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மொத்த லோக்சபா தேர்தலில் 50:50 பார்முலாவின் படி போட்டியிடலாம் என்று முடிவாகி விட்டதாக கூறப்படுகிறது. சிவசேனாவின் இந்த பார்முலாவை பாஜக ஏற்றுக்கொண்டு விட்டதாகவும், ஜெய்ப்பூர் வரும் அமித் ஷா, அதிகாரப்பூர்வ அறிவிப்பை மும்பை வந்து இன்றே அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும்.. முதல்வர் பதவியை தமது கட்சிக்கு தான் அளிக்க வேண்டும் என்றும் சுழற்சி முறையில் அந்த பதவியை இரு கட்சிகளும் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் சிவசேனா பிடிவாதமாக பால்கர் தொகுதியை(கடந்த 2014ம் ஆண்டு இந்த தொகுதியில் பாஜக வென்றது) கேட்டு வருவதாகவும் அதனால் கூட்டணி அறிவிப்பு தள்ளிப்போவதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படி இருப்பினும்.. கடைசி கட்டத்தில் சமரச முயற்சி பலனளிக்கும் என்றும்... தொகுதிகளின் எண்ணிக்கையில் வேண்டுமானால் சிறு, சிறு மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் தெரிகிறது. அனைத்து பிரச்னைகளும் சுமுகமாக தீர்க்கப்பட்டு இன்றே கூட்டணி அறிவிப்பு வெளியாவதற்கான வாய்ப்புகளே மிக அதிகம் என்ற தெரிகிறது.