“தற்கொலை” செய்ய நினைத்தேன்.. அதிகாரத்திலிருந்து மிரட்டல் - பரபரப்பை கிளப்பிய பிரபல நகைச்சுவை கலைஞர்
டெல்லி: பிரபல மேடை நகைச்சுவைக் கலைஞரான முனவர் ஃபரூக்கி, அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னை மிரட்டும்போது பயம் ஏற்படுவதாகவும், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் உருவானதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
பிரபல ஸ்டான்ட் அப் காமெடியனாக இருந்து வருபவர் முனவர் ஃபரூக்கி. குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவரது நகைச்சுவைகளில் அரசியல் நய்யாண்டி, சமூக அவலம் குறித்து அதிகம் பேசுவார்.
குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், திட்டங்கள், புதிய சட்ட மசோதாக்கள் பற்றியும் நகைச்சுவையுடன் கலந்து விமர்சிப்பார் முனவர் ஃபரூக்கி. இதன் காரணமாக முனவர் ஃபரூக்கியை கைது செய்ய வேண்டும் என்றும், அவரது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் இந்துத்துவ அமைப்புகள் குரல் எழுப்பி வந்தன.
வெடித்த சர்ச்சை.. முனவர் பரூக்கியின் காமெடி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த டெல்லி போலீஸ்!
முனவர் ஃபரூக்கி கைது
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் முனவர் ஃபரூக்கி கைதும் செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் நடைபெற இருந்த முனவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சிகள் முன்னறிவிப்பு செய்யப்பட்டு, டிக்கெட்டுகள் விற்கப்பட்ட பின்னர் ரத்து செய்யப்பட்டு வந்தன. முனவர் ஃபரூக்கி மீது பல மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதுடன் அவரது நிகழ்ச்சிகளை நடத்த தடையும் இருப்பதாக கூறப்படுகிறது.
நிகழ்ச்சிகளுக்கு தடை
குஜராத் மாநிலம் சூரத், வதோதரா, மும்பை, ராய்பூர், கோவா உள்ளிட்ட பல நிகரங்களில் இவரது நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டனர். பெங்களூருவில் கடந்த ஆண்டு இதுபோல் அவரது நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டு போலீசார் அனுமதி மறுத்ததால் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக பல இடங்களில் தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்தி இருக்கிறார் முனவர் ஃபரூக்கி
ஐதராபாத் நிகழ்ச்சி
கடந்த மாதம் முனவர் ஃபரூக்கியின் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், தெலுங்கானா அரசும் காவல்துறையும் எதிர்ப்புகளுக்கு இணங்காமல் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசி கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் ரத்து
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 25 ஆம் தேதி டெல்லியில் முனவர் ஃபரூக்கியின் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ஆனால் அதற்கு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக அந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய முனவர் ஃபரூக்கி தனது மனநிலை குறித்து பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதிகாரத்திலிருந்து அச்சுறுத்தல்
"என்னிடம் தணிக்கை சான்றிதழ் இருக்கிறது. சட்ட சிக்கல் ஏதுமின்றி எனது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கிறார்கள். நாம் மட்டும் வேலை செய்யவில்லை என்றால் அது நம்முடைய தனிப்பட்ட பிரச்சனை. ஆனால், 25 முதல் 30 பேர் என்னை நம்பி இருக்கிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அச்சுறுத்துகிறார்கள். அது அச்சம் தருகிறது. எனது பாதுகாப்புக்காக அல்ல, என்னுடைய ரசிகர்களின் பாதுகாப்பு கருதி அஞ்சுகிறேன். நான் ஏன் என்னுடைய ரசிகர்களை ஆபத்தில் தள்ள் வேண்டும்.
தற்கொலை எண்ணம்
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்த செய்தி கேள்விப்பட்டு 2 - 3 நாட்கள் எனது கை நடுக்கத்துடனே இருந்தது. இன்று வரை தற்கொலை தொடர்பாக செய்திகளை கேள்விப்பட்டால் அதுபற்றியே சிந்திக்க தொடங்கிவிடுகிறேன். தற்கொலைக்கான தேவை என்ன என்பதை யோசிக்கிறேன். எனக்கு தற்கொலை எண்ணங்கள் வரத் தொடங்கியபோது, கடவுள் எனக்கு அனுமதிக்கவில்லை என்று நினைத்துவிட்டு என்னுடைய முகத்தை பார்ப்பேன்." என்றார்.