ஈஸியா வீடு கட்ட விட்டுருவாங்களா என்ன.. உயரப்போகிறது சிமெண்ட் விலை.. மூட்டைக்கு எவ்வளவு தெரியுமா?
டெல்லி: கடந்த மாதம் சிமெண்ட் விலை மூட்டை ஒன்றிற்கு ரூ.3-4 வரை உயர்ந்த நிலையில், நடப்பு நவம்பர் மாதத்தில் ரூ.10-30 வரை விலையை உயர்த்த உற்பத்தி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதனால், கட்டுமான செலவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு துறைகளில் ஒன்றாக கட்டுமானத்துறை விளங்குகிறது. இந்த கட்டுமானத்துறையில் முழு வீச்சில் பணிகள் நடக்க சிமெண்ட் உள்ளிட்டவை முக்கிய மூலப்பொருளாக உள்ளது.
இதனால், சிமெண்ட் விலை ஏற்றம் கட்டுமானத்துறையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

மூட்டை ஒன்றுக்கு ரூ.30 அதிகரிக்கும்
இந்தியா போன்ற நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் சொந்த வீடு என்பது பலருக்கும் பெரும் கனவாக உள்ளது. இதனால், பட்ஜெட் போட்டு வீடு கட்ட திட்டமிட்டு இருக்கும் பலருக்கும் சிமெண்ட் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. Emkay Global Financial Services Ltd என்ற நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி சிமெண்ட் விலை மூட்டை ஒன்றிற்கு 30 ரூபாய் வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு மாதத்திலே உயரும்?
நடப்பு மாதத்தில் இந்த விலையை உயர்த்த சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் கட்டுமானத்துறையினருக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் ரூ.3-4 வரை ஒரு மூட்டைக்கு சிமெண்ட் விலை ஏறியிருந்த நிலையில், இந்த மாதத்தில் அதிரடியாக ரூ.10-30 வரை விலையேற்றம் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அடுத்த சில நாட்களில் சிமெண்ட் விலை உயர்வு குறித்த அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலாளர்கள் பற்றாக்குறை
மாதாந்திர அடிப்படையில் கடந்த மாதம் 2-3 சதவீதம் அளவுக்கு நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும், மேற்கு பகுதிகளில் 1 சதவீதமும் சிமெண்ட் விலை உயர்ந்தது. வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் 1-2 சதவீதம் விலை வீழ்ச்சி அடைந்தது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை தாமதமாக முடிவுக்கு வந்தது, பண்டிகை கால விடுமுறையால் ஏற்பட்ட தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணிகள் அக்டோபர் மாதத்தில் தேவையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சூடுபிடிக்கும் கட்டுமானப்பணிகள்
எனவே வரும் வாரங்களில் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அனைத்து முக்கிய பண்டிகைகளும் முடிந்து தொழிலாளர்கள் முழு வீச்சில் பணிக்கு வந்து விட்டனர். இதனால், கட்டுமானப்பணிகள் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. இதை எதிர்கொள்ள சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களும் தயாராகி வருகின்றன. சிமெண்ட் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளாக இருக்கும் பெட் கோக் விலை 30 சதவீதம் குறைந்துள்ளது.

மூன்றாம் காலாண்டில் குறையும்
இந்த எரிபொருளின் விலை மேலும் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், டன் ஒன்றிற்கு ரூ.150 அல்லது 200 வரை மூன்றாம் காலாண்டில் குறையும் என்று Emkay Global வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நடப்பு நவம்பர் மாதத்தில் சிமெண்ட் விலை ரூ. 30 வரை உயர இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் வீடு கட்டுவோருக்கும் வீடுகள் மற்றும் கட்டுமான பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பவர்களுக்கும் அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications