குலாம்நபி ஆசாத்துக்கு மோடி உள்ளிட்டோர் புகழாரம்-மவுனமான காங். - முடிவுக்கு வரும் அரசியல் அத்தியாயம்?
டெல்லி: ராஜ்யசபா எம்.பி. பதவியில் இருந்து குலாம்நபி ஆசாத் ஓய்வு பெறும் நிலையில் பிரதமர் மோடி உட்பட காங்கிரஸ் அல்லாத தலைவர்கள் அவருக்கு புகழாரம் சூட்டினர். ஆனால் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர் இதை மவுனமாகவே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
1970களில் குலாம்நபி ஆசாத் இளைஞராக காங்கிரஸுக்குள் நுழைந்தார். இந்திராவால் ஈர்க்கப்பட்டு பின்னர் ராஜீவ் காந்தி காலத்தில் மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஒரு தலைவராக உருவானவர் குலாம்நபி ஆசாத். ஜம்மு காஷ்மீரின் காங்கிரஸ் முகமாக திகழ்ந்த குலாம்நபி ஆசாத் 2005-ல் அம்மாநில முதல்வராக்கப்பட்டார்.
அதற்கு முன்னர் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தார். ஆனால் குலாம்நபி ஆசாத்தின் முதல்வர் பதவி காலம் அப்படி ஒன்றும் சுமூகமாக இருந்தது இல்லை. அமர்நாத் நில யாத்திரை விவகாரத்தில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டு 7 பேர் பலியாகினர். இதனால் 2008-ல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார் குலாம்நபி ஆசாத்.
குலாம்நபி ஆசாத்துக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை? ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராகிறாரா ப. சிதம்பரம்?
குலாம்நபி சர்ச்சை
சோனியா, ராகுல் காந்திக்கு மிக நெருக்கமான நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்தார் குலாம்நபி ஆசாத். ஆனால் அவரது பல சர்ச்சை பேச்சுகள் காங்கிரஸ் கட்சியில் பெரும் புயலை கிளப்பின. காங்கிரஸ் கட்சியின் இந்து வேட்பாளர்கள், முஸ்லிம் என்பதால் என்னை பிரசாரத்துக்கு கூப்பிடுவது இல்லை என்றெல்லாம் பேசியிருந்தார் குலாம்நபி ஆசாத். இதனால் மெல்ல மெல்ல காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து விரிசலை எதிர்கொள்ளவும் நேரிட்டவர் குலாம்நபி ஆசாத்.
மேலிடத்துக்கு எதிராக கலக குரல்
இதன் உச்சகட்டமாகத்தான் ஜி 23 தலைவர்கள் என்கிற காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கலக குரல் அக்கட்சியில் பிரளயத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர் நியமனம் தொடர்பான இந்த கலக குரல்காரர்களில் குலாம்நபி ஆசாத் முக்கியமானவராக பார்க்கப்பட்டார்.
பொதுச்செயலர் பதவி பறிப்பு
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் மாற்றப்பட்ட போது பொதுச்செயலாளர் பதவியில் இருந்து குலாம்நபி நீக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கான 370வது பிரிவு நீக்க விவகாரத்தில் என்னதான் வெளிப்படையாக பாஜகவுடன் மோதினாலும் குலாம்நபி ஆசாத்தை அந்த கட்சிக்கு நெருக்கமானவராகவே காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்தனர். ஏனெனில் ஜம்மு காஷ்மீரின் அத்தனை முன்னாள் முதல்வர்களும் சிறையில் அடைக்கப்பட்ட போது குலாம்நபி ஆசாத் மீது நடவடிக்கை எதுவுமே பாயவில்லை.
ராஜ்யசபா எம்பி பதவி
இந்த பின்னணியில் குலாம்நபி ஆசாத்தின் ராஜ்யசபா எம்பி பதவி காலம் வரும் 15-ந் தேதி முடிவடைகிறது. இதனையொட்டி ராஜ்யசபாவில் நடைபெற்ற பிரிவு உபசார நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி கண்கலங்கிப் போய் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார். காங்கிரஸ் அல்லாத தலைவர்கள், குலாம்நபி ஆசாத் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் சசிதரூர், ஆனந்த் சர்மா என சிலர் மட்டுமே குலாம்நபி ஆசாத்துக்கு புகழாரம் சூட்டினர். இவர்கள் கூட காங்கிரஸ் தலைமைக்கு எதிரான சோ கால்ட் ஜி23குழுவில் இருந்தவர்கள்.
கேரளாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாகிறார் ஜம்மு காஷ்மீரின் குலாம் நபி ஆசாத்
முடிவுக்கு வரும் குலாம்நபி அத்தியாயம்
இப்போது ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக குலாம்நபி ஆசாத் இருந்து வருகிறார். அவரது பதவி காலம் முடிவடையும் நிலையில் நிச்சயமாக காங்கிரஸ் கட்சி அவரை மீண்டும் எம்.பி.யாக்க வாய்ப்பு இல்லை என்கின்றன டெல்லி தகவல்கள். ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை இப்போது இல்லை என்கிற ஒற்றை காரணத்தை முன்வைத்தே குலாம்நபி ஆசாத்தின் அரசியல் அத்தியாயத்தை காங்கிரஸ் முடித்துவிடும் என்கின்றனர். இதனால் தமிழகத்தின் ப. சிதம்பரம், கர்நாடகாவின் கார்கே உள்ளிட்டோரில் ஒருவர் அடுத்த ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராகலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.