அமெரிக்காவிடம் வசமாக சிக்கிய அதானி-நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரும் காங்கிரஸ்!
டெல்லி: அமெரிக்காவின் 2 பில்லியன் டாலர் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் லஞ்சமாக கொடுக்க ஒப்புக் கொண்ட விவகாரத்தில் நியூயார்க் நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து இந்திய தொழிலதிபர் அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதானிக்கு எதிராக இந்த வழக்கால் இந்தியப் பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை எதிர்கொண்டன. மேலும் இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிதி ஆய்வு நிறுவனம், அதானி குழுமத்தின் பங்கு சந்தை முறைகேடுகளை அம்பலப்படுத்தி இருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த விவகாரத்தில் செபி அமைப்பின் தலைவர் மாதவி புச் உள்ளிட்டோர் மீதான விமர்சனங்கள் தொடருகின்றன.

இந்த நிலையில் அதானி குழுமம், அமெரிக்காவின் 2 பில்லியன் டாலர் ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு 265 மில்லியன் டாலர் பணத்தை லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு கொடுக்க முன்வந்ததாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அமெரிக்கா, நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளிட்ட 7 பேர் மீது நியூயார்க் நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்தியாவில் இந்த வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பங்குச் சந்தைகளில் அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவை எதிர்கொண்டுள்ளன. மேலும் அதானி குழுமத்தின் முறைகேடுகள் தொடர்பாக 10 ஆண்டுகளாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. தற்போது நியூயார்க் நீதிமன்றமும் வழக்கு பதிவு செய்து பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவை உடனே அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தி உள்ளார்.
ஏற்கனவே அதானி குழுமத்துக்கும் மத்திய அரசுக்குமான உறவுகள் குறித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வருகிறார். தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் அதானி விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனால் நாடாளுமன்றத்திலும் அதானி குழும முறைகேடுகளை இந்தியா கூட்டணி எழுப்பும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications