மோடி பேச்சை குடும்பமே கேட்கல.. 52 ஆண்டாக தேசியக்கொடி ஏற்றாத RSS - பாய்ண்டை பிடித்த ஜெய்ராம் ரமேஷ்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை டிபியாக வைக்க சொன்னதை அவரது குடும்பத்தினரே கேட்கவில்லை என ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை மத்திய அரசு அமுத பெருவிழாவாக கொண்டாட தயாராகி வருகிறது. குறிப்பாக சுதந்திர தின விழாவுக்காக தேசியக்கொடி விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றங்களை செய்து இருக்கிறது.
கைத்தறி பருத்தி துணியால் மட்டுமே தேசிய கொடிகளை பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், எந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டர், காட்டன், கம்பளி, பட்டு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய கொடி டிபி.. பிரதமர் மோடி கோரிக்கையை ஏற்ற திமுக எம்பி! அங்கதான் “டுவிஸ்ட்”
மன் கி பாத்
இதற்காக கடந்த ஆகஸ்டு 2 ஆம் தேதியில் இருந்து சுதந்திர தினமான ஆகஸ்டு 15 ஆம் தேதி வரை சமூக வலைதள கணக்குகளின் புரொபைல் படங்களில் தேசிய கொடியை வைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக கடந்த ஜூலை 31 ஆம் தேதி மான் கி பாத் வானொலி உரையில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்த மான் கி பாத் உரை மிகவும் சிறப்புமிக்கது.
75 வது சுதந்திர தினம்
அதற்கு முக்கிய காரணம் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வது ஆண்டை நிறைவு செய்து இருக்கிறது. நான் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தின் ஆதாரங்களாக விளங்குகிறோம். நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்த புரட்சியாளர்களுக்கு எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன். இந்திய சுதந்திரத்தின் அமுத பெருவிழா மக்கள் பேரியக்கமாக உருவெடுத்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
டிபி மாற்றிய பிரதமர்
ஆகஸ்டு 13 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 15 ஆம் தேதி தேதி வரை வீடுதோறும் தேசியக்கொடி ஏற்ற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இயக்கத்தில் பங்கேற்று நீங்களும் உங்கள் இல்லங்களில் தேசியக்கொடியை ஏற்றி பறக்க விடுங்கள். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் என பலரும் தேசியக் கொடியை ட்விட்டர் கணக்கில் புரொபைல் படங்களாக வைத்துள்ளார்கள்.
ஜெய்ராம் ரமேஷ் பதிவு
அதேநேரம் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் நேரு தேசியக் கொடியை வைத்திருப்பதை போன்ற படத்தை டிபியாக மாற்றியுள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "கடந்த 52 ஆண்டுகளாக நாக்பூரில் உள்ள தங்கள் தலைமையகத்தில் தேசியக்கொடி ஏற்றாத பிரதமர் மோடியின் குடும்பத்துக்கு அவரது செய்தி சேரவில்லை என்று தெரிகிறது. அவர்கள் பிரதமருக்கு கட்டுப்படுவார்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.