ரத்தம் உறைய வைக்கும் கோவிஷீல்டு? அலறவிட்ட அஸ்ட்ராஜெனகா! இப்போ பேனர் வைங்க மோடி..காங்., கிடுக்குபிடி
டெல்லி: கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி காரணமாக ரத்த உறைவு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படுவதாக அதனை தயாரித்த ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தெரிவித்திருக்கும் நிலையில் பிரதமர் மோடியின் பதில் என்ன? தடுப்பூசி வழங்கியதற்கான பெருமை தனக்கு மட்டுமே சேரும் என அவர் கூறியதற்கு பதிலளிக்க வேண்டுமென காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதற்கு அடுத்ததாக உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் அடுத்த இரு ஆண்டுகளில் அதன் பாதிப்பு எண்ணிப் பார்க்க முடியாத அளவு இருந்தது.

லட்சக்கணக்கில் உயிரிழப்பு இருந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. மருத்துவ கட்டமைப்புகள் மத்திய மாநில அரசுகளின் தீவிர முயற்சி காரணமாக கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
கோவிஷீல்ட் தடுப்பூசி: இதனையடுத்து மத்திய அரசு சார்பில் கொரோனாவுக்கு கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மூன்று தவணைகளாக கொடுக்கப்பட்டது. சுமார் 200 கோடு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதும் வெளிநாட்டு பயணங்களின் போதும் இந்தியாவில் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கியதை பெருமையாக கூறினார். மேலும் மத்திய அரசு சார்பிலும் பாஜக ஆளும் மாநிலங்களிலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டது.
பக்க விளைவுகள்: நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு பிளக்ஸ் பேனர்களும் வைக்கப்பட்டது. இந்த நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது. பொதுவாக தடுப்பூசி போட்ட பின் அந்த நபர்களுக்கு லேசான வலி, மிதமான காய்ச்சல், உடல் வலி, அரிப்பு, ஒவ்வாமை போன்ற சாதாரண அறிகுறிகள் இருக்கும். இந்த நிலையில் நடிகர் ஒருவரின் மரணம் மற்றும் கொரோனா காலத்தில் இளைஞர்களின் திடீர் மரணம் மாரடைப்பு போன்றவற்றை தொடர்பு படுத்தி அவை தடுப்பூசியால் தான் நிகழ்ந்தது என சமூக ஊடகங்களில் கூறப்பட்டது.
ஆஸ்ட்ராஜெனிகா விளக்கம்: இளம் வயது மரணங்கள் அதிகரித்த நிலையில் கொரோனா தொற்றுக்கு எதிராக மத்திய அரசு மக்களுக்கு அளித்த தடுப்பூசிகளால் சாதாரண அறிகுறிகளை தவிர தீவிரமான பக்க விளைவுகள் ஏற்படுவது உண்மைதான் என ஐசிஎம்ஆர் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. மேலும் தடுப்பூசிகள் பக்கவிளைவை ஏற்படுத்தின என மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பான சிடிஎஸ்சிஓ ஒப்புக்கொண்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து ஆஸ்ட்ராஜெனிகா விளக்கம் அளித்துள்ளது.
பலத்த அதிர்வலை: கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் சிலருக்கு ரத்த உறைவு மற்றும் ரத்த பிளேட்லெட் குறைவு பிரச்சனை ஏற்படலாம் என ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இங்கிலாந்து-ஸ்வீடன் நாட்டின் ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் கோவிஷீல்டு மருந்தை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தயாரித்து மக்களுக்கு வழங்கியது. இந்நிலையில் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கோவிஷீல்டு மருந்தால், ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக 51க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கு பதிலளித்த ஆஸ்ட்ராஜெனிகா , தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் காரணமாக மிகச் சிலருக்கு அரிதான சில பக்கவிளைவுகள் ஏற்படலாம் என பதிலளித்துள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கேள்வி: இந்நிலையில் இந்தியாவில் ’தடுப்பூசி வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் எங்கே?” என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ்,”கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் ரத்த உறைவு உள்ளிட்ட சில பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆஸ்ட்ராஜெனிக்கா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.. பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்ட பேனர்கள் எங்கே? பிரதமரும் சுகாதார அமைச்சகமும் இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது ஏன்? தடுப்பூசி வழங்கியதற்கான பெருமை தனக்கு மட்டுமே சேரும் என்று கூறிய பிரதமர் மோடி இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்!” என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications