வெறும் 25 நாட்கள்... 5 மடங்கு அதிகரித்த கொரோனா.. தினசரி பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது... காரணம் என்ன
டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் வெறும் 25 நாட்களில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தவிர மத்திய கிழக்கு நாடுகளிலும் கூட வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரசின் கோர தாண்டவம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. வைரஸ் பரவும் வேகம் தான் தற்போது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் ஒரு லட்சம்
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 1,03,558 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியது முதல் தினசரி வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டுவது இதுவே முதல் முறையாகும். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக தற்போது இந்தியாவில் தான் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.25 கோடியைக் கடந்துள்ளது.
இரண்டாவது நாடு
தற்போது வைரஸ் பரவும் வேகம் தான் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு தொடக்கம் முதலே வைரஸ் பரவல் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு இந்தியாவில் 20,000ஐ எட்டியது. இப்போது வெறும் 25 நாட்களில் வைரஸ் பரவல் ஐந்து மடங்கு அதிகரித்து ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. முன்னதாக, கடந்தாண்டு கொரோனா தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தில் இருந்து 97 ஆயிரத்தை அடைய 76 நாட்கள் எடுத்துக்கொண்டது.
இரண்டாவது அலை
இதன் மூலம் கடந்த ஆண்டைவிட தற்போது இரண்டாம் அலையில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ளது தெளிவாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு தீவிரமான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களும் அச்சத்தால் மாஸ்க்குகளை முறையாக அணிந்தனர். ஆனால், இப்போது வழிகாட்டுதல்களை பெரும்பாலான மக்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை. இத்துடன் மரபணு மாறிய கொரோனாவும் சேர்ந்துள்ளதால், வைரஸ் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா ரொம்ப மோசம்
கொரோனா காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்குக் கடந்த 25 மணி நேரத்தில் மட்டும் 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் 58.23% பேர் மராட்டியத்தைச் சேர்ந்தவர்கள். அதைத்தொடர்ந்து சத்தீஸ்கரில் 5,250 பேருக்கும் கர்நாடகாவில் 4,553 பேருக்கும் கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
தேர்தல் மாநிலங்கள்
மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கேரளா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், டெல்லி, தமிழகம், மத்தியப் பிரதேசம், பஞ்சாம் ஆகிய மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவில் நாளை சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.