மாநில அரசுகள் முடிவுகள் எதிரொலி- நாடு முழுவதும் லாக்டவுன் ஏப். 30 வரை நீட்டிப்பு?
டெல்லி: கொரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் அமலில் உள்ள லாக்டவுன் நாடு முழுவதும் ஏப்ரல் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது.
Recommended Video
கொரோனா தொற்று நோய் மக்களை பலி கொள்வதைத் தடுக்கும் வகையில் கடந்த 20 நாட்களாக நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் உள்ளது. இந்த லாக்டவுன் நாளையுடன் நிறைவடைகிறது.
அதேநேரத்தில் நாட்டில் கொரோனா தொற்று நோய் தாக்கமும் அதிகரித்து வருகிறது. இதுவரை 308 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லாக்டவுனை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது என தகவல்கள் வெளியாகின.
அண்மையில் நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைகளில் லாக்டவுன் நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பது தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் ஒடிஷா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஏப்ரல் 30ந் தேதி வரை லாக்டவுனை நீட்டித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது தமிழக அரசும் லாக்டவுனை நீட்டிப்பதாக அறிவித்திருக்கிறது.
இதனால் பல மாநில அரசுகளின் முடிவுகளின் படி லாக்டவுனை மத்திய அரசும் ஏப்ரல் 30-ந் தேதி வரை நீட்டிக்கக் கூடும் என தெரிகிறது. இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி நாளை வெளியிடலாம் என தெரிகிறது.