ரொம்ப கடன்பட்டு இருக்கோம்.. மன்மோகன் சிங் தான் சிறந்த பொருளாதார நிபுணர்..பாராட்டி தள்ளிய கட்காரி
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தபோது தொடங்கிய பொருளாதார சீர்த்திருத்தங்களால் இந்தியா புதிய திசையை நோக்கி பயணிக்க துவங்கியது. இதற்காக நாடு எப்போதும் அவருக்கு கடன்பட்டுள்ளது என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசினார்.
பாஜக மூத்த தலைவராக இருப்பவர் நிதின் கட்காரி. மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் டிஐஓஎல் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 'TaxIndiaOnline' என்ற அமைப்பு சார்பில் விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
அடுத்த அக்கப்போருக்கு அஸ்திவாரம்- மாநில நெடுஞ்சாலைகளை கபளீகரம் செய்யும் மத்திய அரசு- நிதின் கட்காரி
நிதின் கட்காரி பேச்சு
இந்த விழாவில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கை பெருமையாக பேசினார். மேலும் அவரது பொருளாதார சீர்த்திருத்தங்களை புகழ்ந்து தள்ளினார். இதுதொடர்பாக நிதின் கட்காரி பேசியதாவது:
மன்மோகன் சிங்கிற்கு பாராட்டு
1991ல் மத்திய நிதி அமைச்சராக மன்மோகன் சிங் இருந்தார். இவர் தொடங்கிய பொருளாதார சீர்த்திருத்தங்கள் மூலம் இந்தியா புதிய திசையை நோக்கி பயணிக்க துவங்கியது. அது தாராளமய பொருளாதாரத்துக்கு வழிவகுத்தது. இந்த தாராளமயமான பொருளாதார கொள்கை என்பது விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கானது தான். இந்த பொருளாதார சீர்த்திருத்தங்களுக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நாடு கடன்பட்டுள்ளது.
சாலைக்கு பணம் திரட்ட உதவியது
1900 மத்திய பகுதியில் மகாராஷ்டிராவில் அமைச்சராக இருந்தேன். அப்போது மகாராஷ்டிராவில் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த சாலைகளுக்கு தேவையான நிதி திரட்டும் பணி துவங்கியது. இதற்கு மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்த்திருத்தங்கள் கைக்கொடுத்து உள்ளன.
சீனா சிறந்த உதாரணம்
நாட்டின் வளர்ச்சிக்கு தாராளமயமான பொருளாதார கொள்கை எப்படி உதவும் என்பதற்கு சீனா சிறந்த உதாரணமாகும். இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், விரைவுப்படுத்தவும் நாட்டுக்கு அதிக முதலீடு தேவையானதாக உள்ளது. நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சாமானியர்களிடம் இருந்து நிதி திரட்டி வருகிறது.
ரூ.1.40 லட்சம் கோடியாக உயரும்
தற்போது நாட்டில் 26 பசுமை வழி விரைவுச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பணப்பற்றாக்குறை என்பது இல்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சுங்கவரி வருவாய் தற்போது ஆண்டுக்கு 40,000 ஆயிரம் கோடியாக உள்ளது. 2024 இறுதியில் இது ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரிக்கும்'' என்றார்.