2-18 வயது சிறார்களிடம் அடுத்த மாதம் கோவாக்சின் சோதனை.. சில மாதங்களில் ஒப்புதல்.. பாரத் பயோடெக் தகவல்
டெல்லி: குழந்தைகள் மத்தியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2-18 வயதுடைய குழந்தைகள் மத்தியிலான கொரோனா சோதனைகள் அடுத்த மாதம் தொடங்கும் என பாரத் பயோடெக் அறிவித்துள்ளது
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ஆம் அலையின் பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டாம் அலையில் வைரஸ் பாதிப்பு மிக மோசமாக உள்ளது.
இளைஞர்கள் மற்றும் இணை நோய் இல்லாதவர்கள் மத்தியில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் 2ஆம் அலையில் அதிகரித்துள்ளது. இதுதவிர அதிர்ச்சியை அளிக்கும் வகையில் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் மத்தியில் வைரஸ் பாதிப்பு உயர்ந்து வருகிறது.

குழந்தைகளுக்கு அனுமதி இல்லை
தற்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகிறது. மத்திய அரசு 18+ அனைவருக்கும் தடுப்பூசிகளைச் செலுத்த அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் சிறார்களுக்கும் 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு இதுவரை எவ்வித தடுப்பூசிக்கும் அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த மாதம் சோதனை தொடக்கம்
இந்நிலையில், இரண்டு முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியின் பரிசோதனைகளை மேற்கொள்ள மருந்து கட்டுப்பாடு அமைப்பு கடந்த வாரம் அனுமதி அளித்தது. இந்தியாவிலேயே குழந்தைகளிடம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். மொத்தம் 525 குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த பாரத் பயோடெக் திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்றும் பாரத் பயோடெக் அறிவித்துள்ளது.

தடுப்பூசி உற்பத்தி
இது குறித்து மேலும் அந்நிறுவனத்தின் வணிக மேம்பாடு மற்றும் சர்வதேச பிரிவின் தலைவர் டாக்டர் ரேச்ஸ் எல்லா கூறுகையில், கடந்த ஆண்டு நாங்கள் தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தினோம். இந்த ஆண்டு தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதில் கவனத்தைச் செலுத்தி வருகிறோம். குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசிக்கு இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
எங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஒத்துழைப்பை அளித்து வருகிறது. சுமார் 1500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை மத்திய அரசு எங்களுக்கு அளித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆண்டுதோறும் 70 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் அளவுக்கு உற்பத்தித் திறன் உயர்த்தப்படும். கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் சில மாதங்களில் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications