இந்தியாவில் 'பேரழிவை' ஏற்படுத்திய கொரோனா 2ஆம் அலை.. மற்ற நாடுகளுக்கு மிகப் பெரிய எச்சரிக்கை
டெல்லி: கொரோனா 2ஆம் அலையால் இந்தியாவில் பேரழிவு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சர்வதேச நிதியம், கொரோனாவால் எந்தளவு மோசமான பாதிப்பு ஏற்படும் என்பதற்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது
உலகின் பல நாடுகளும் கொரோனா வைரஸ் 2ஆம் அலையால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, 2ஆம் அலையால் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்பு என்பது மிக மோசமாகவே இருந்தது.
இம்மாத தொடக்கத்தில் அதிகபட்சமாகத் தினசரி கொரோனா பாதிப்பு இந்தியாவில் 4.10 லட்சம் வரை சென்றது. அதேபோல தினசரி உயிரிழப்புகளும் 4000ஐ தாண்டியது.
கொரோனா காலத்தில் விடுமுறை போல ஊர்சுற்றுகின்றனர்...இனி தளர்வுகளற்ற ஊரடங்கு - ஸ்டாலின்
வளரும் நாடுகள்
இந்நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு பற்றி சர்வதேச நிதியம் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "பிரேசில் நாட்டில் மிக மோசமான கொரோனா பாதிப்பிற்குப் பிறகு, இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது வளரும் நாடுகளில் மோசமான நிகழ்வுகள் இன்னும் ஏற்படவில்லை என்பதற்கான அறிகுறியாகவும் கொரோனாவின் பாதிப்பை உணர்த்தும் ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கலாம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
மோசமான பாதிப்பு
முதல் அலையை இந்தியாவின் சுகாதார உட்கட்டமைப்பு சிறப்பாகச் சமாளித்தது. ஆனால், 2ஆம் அலையில் நிலைமை அப்படியிருக்கவில்லை. நாட்டில் பலர் ஆக்சிஜன் இல்லாமலும், மருத்துவ வசதிகள் கிடைக்காமலும் உயிரிழந்தனர். மற்ற வளரும் நாடுகளில், குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள், கொரோனாவால் எந்தளவுக்கு மிக மோசமாகப் பாதிக்கப்படலாம் என்பதையே இது காட்டுகிறது.
கொரோனா தடுப்பூசி
தற்போதைய சூழலில் இந்தாண்டு இறுதிக்குள் இந்தியாவில் 35% வரையிலான மக்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்த முடியும். நாட்டிலுள்ள 60% மக்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்த உடனடியாக அதிகளவிலான தடுப்பூசிகளுக்கு இந்தியா ஆர்டர் அளிக்க வேண்டும். மத்திய அரசு தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ள ஊக்கத் தொகை கண்டிப்பாக உற்பத்தியை அதிகரிக்கும். இதுபோல தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி பாதிப்பு
தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த இந்தியா குறைந்தபட்சம் 100 கோடி தடுப்பூசிகளை உடனடியாக ஆர்டர் கொடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் தடுப்பூசிகளின் மூலப்பொருட்களில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக உற்பத்தி பாதிக்கப்படலாம். எனவே, மற்ற வழிகளைப் பயன்படுத்தி, தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.