கொரோனா பரவலுக்கு எதிரான அரசு நடவடிக்கை என்ன.. உச்சநீதிமன்ற விசாரணை தொழில்நுட்ப கோளாறால் ஒத்திவைப்பு
டெல்லி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொரோனா நிர்வாகம் தொடர்பான வழக்கை இன்று விசாரிக்க முடியவில்லை என கூறிய உச்சநீதிமன்றம், வழக்கை மே 13ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக, உச்சநீதிமன்றம், தானாக முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது.
நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதை விசாரித்து வருகிறது.
முந்தைய விசாரணையின்போது, கொரோனா வேக்சின் விலையில் வித்தியாசம் இருப்பதை சுப்ரீம் கோர்ட் சுட்டிக் காட்டியது. ஆனால் மத்திய அரசோ, போட்டி சந்தையை உருவாக்கி நிறைய தடுப்பூசிகளை நாட்டுக்குள் கொண்டுவரத்தான் மாநிலங்களுக்கு ஒரு விலையும், மத்திய அரசுக்கு குறைந்த விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என பதிலளித்தது.
மேலும் இந்த விஷயத்தில், உச்சநீதிமன்றம் தலையிடுவது சரியல்ல என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் 3 நீதிபதிகள் பெஞ்ச் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தொழில்நுட்ப கோளாறால் நீதிமன்ற சர்வர் செயல்படவில்லை என்று கூறிய நீதிபதிகள், வரும் 13ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர். ஏனெனில் வழக்கு விசாரணை வீடியோ மூலமாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசிக்கு பல கோடி செலவு..பொதுத்துறை நிறுவனங்களின் கதி என்ன? ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி
முன்னதாக, நீதிபதி சந்திரசூட், "நான் நேற்று இரவில்தான் மத்திய அரசின் பிரமாணப் பத்திரம் கிடைக்கப் பெற்றேன். இந்த பெஞ்சிலுள்ள பிற 2 நீதிபதிகளுக்கு காலையில்தான் அவை கிடைத்தன. ஆனால், அதற்குள்ளாக ஊடகங்களில் பிரமாணப் பத்திரத்தில் உள்ள தகவல் வெளியாகியுள்ளது" என்றார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்த பின்னர், அந்த நகலை மாநிலங்களுக்கு வழங்கியதாகவும், எனவே ஊடகங்களுக்கு அந்த தகவல்கள் எங்கிருந்து கிடைத்தன என்பதை அறிந்து கொள்வது மிகவும் கடினம் என்றும் தெரிவித்தார்.