ரெம்ப கஷ்டம்.. இந்த 2 மாநிலங்கள்.. உரிய நடவடிக்கை இல்லைன அவ்வளவுதான்... மத்திய அரசு எச்சரிக்கை
டெல்லி: மகாராஷ்டிர மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக உள்ளது கவலையளிப்பதாகச் சுகாதார துறைச் செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் கடந்த சில வாரங்களாகவே மீண்டும் அதிகரித்து வருகிறது. உருமாறிய கொரோனா மற்றும் பொதுமக்களின் அலட்சியப் போக்கே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்தற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கச் சுகாதார துறை செயலர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கொரோனா மிக வேகமாகப் பரவி வருவதாகவும் அது கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த இரண்டு மாநிலங்களைத் தவிரவும் குஜதார், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் டாப் 10 மாவட்டங்களில் புனே, நாக்பூர், மும்பை என ஒன்பது மாவட்டங்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவை என்றும் ஒன்று கர்நாடகாவை (பெங்களூரு) சேர்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் கொரோனா காரணமாக உயிரிழப்பவர்களில் 88% பேர் 45 வயதைக் கடந்தவர்கள். இதன் காரணமாகவே வயது வாரியாக தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், வரும் காலங்களில் தனியார் தடுப்பூசி மையங்கள் அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.