வெளிநாடு செல்லும் மாணவர்கள், வீரர்கள்.. பாஸ்போர்ட்டுடன் கோவின் சான்றிதழ் இணைப்பு.. மத்திய அரசு!
டெல்லி: இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் பணியாளர்கள், மாணவர்கள், டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கான வேக்சின் டோஸ் இடைவெளி 4 வாரமாக குறைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதோடு இவர்களின் கோவின் சான்றிதழ் பாஸ்போர்ட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு தற்போது தனது வேக்சின் கொள்கையை மாற்றியுள்ளது. பிரதமர் மோடி நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக வேக்சின் கொடுப்பதாகவும், இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை விநியோகிக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் பணியாளர்கள், மாணவர்கள், டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கான வேக்சின் கொள்கையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்கள் வெளிநாடு செல்ல வசதியாக முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்கும் இடைப்பட்ட காலம் 4 வாரமாக சுறுக்கப்பட்டுள்ளது.
இது சாதாரண நபர்களுக்கு 12-16 வாரமாக உள்ள நிலையில் வெளிநாடு செல்லும் பணியாளர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு 4 வாரமாக குறைக்கப்பட்டுள்ளது. இவர்களின் பயணம் தடைபடாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கபபட்டுள்ளது. ஆகஸ்ட் 31 வரை பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு இந்த வசதி பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் தொடரை மனதில் வைத்தும் இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற பின்வரும் காரணங்கள் இருக்க வேண்டும்.
a) கல்விக்காக வெளிநாடு செல்பவராக இருக்க வேண்டும்.
b) வேலையில் சேர்வதற்காக வெளிநாடு செல்பவராக இருக்க வேண்டும்.
c) விளையாட்டு வீரர், அவர்களுடன் செல்லும் ஊழியர்கள், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபெறும் வீரர்களாக இருக்க வேண்டும்.
இவர்களுக்கு இரண்டாவது டோஸ் வேக்சின் 4 வாரங்களில் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் முறையான ஆவணங்களை கொடுத்து, தங்களின் வெளிநாட்டு பயணத்திற்கான காரணத்தை உறுதி செய்து, இந்த சலுகையை பெற முடியும்.
மேற்கண்ட காரணங்கள் இருக்கும்பட்சத்தில் இரண்டாவது டோஸ் வேக்சினை 4 வாரத்திற்குள் எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படும்.
பாஸ்போர்ட்
மேலும் டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் நபர்கள் தங்கள் ஆவணத்தில் கோவிஷீல்ட் பெற்று இருந்தால், கோவிஷீல்ட் என்று குறிப்பிட்டால் போதும் கூடுதல் ஆவணங்களை தர வேண்டிய அவசியம் இல்லை. அதோடு பாஸ்போர்ட் கொடுத்து வேக்சின் பெற்று இருந்தால் சான்றிதழில் பாஸ்போர்ட் எண் இடம்பெற்று இருக்கும். இதை காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம். இல்லையென்றால் தேவைப்படும் பட்சத்தில் பாஸ்போர்ட் எண் கொண்ட புது வேக்சின் சான்றிதழ் வழங்கப்படும். அதோடு வெளிநாடு செல்வதற்கு வசதியாக இவர்களின் கோவின் சான்றிதழ் பாஸ்போர்ட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.