'இந்தியா' கூட்டணி முதல் விக்கெட் அவுட்?வெளியேறும் சிபிஎம்? போபால் மீட்டிங் கேன்சல் பரபர பின்னணி!
டெல்லி: "இந்தியா" கூட்டணியின் அக்டோபர் 2 போபால் பொதுக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதற்கு மேலும் பரபரப்பான காரணங்கள் வெளியாகி உள்ளன.
பாஜகவுக்கு எதிரான "இந்தியா" கூட்டணியில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த அணியில் இடதுசாரிகளும் இடம் பெற்றிருக்கின்றன.

சரித்திரத்தில் இடதுசாரிகள்: இந்திய வரலாற்றில் இதற்கு முந்தைய எதிர்க்கட்சிகளின் கூட்டணிகளில் 'இடதுசாரிகள்' எனப்படும் சிபிஐ, சிபிஎம் ஆகியவை மிக முக்கிய பங்கு வகித்துள்ளன. 1989-ல் தேசிய முன்னணி உருவாக்கப்பட்ட போது பாஜகவும் இடதுசாரிகளும் வெளியில் இருந்து விபி சிங் அரசாங்கத்தை ஆதரித்த வரலாறு உண்டு. காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணி அரசுக்கும் இடதுசாரிகள் தொடக்கத்தில் ஆதரவு தந்த சரித்திரமும் உண்டு.
சிபிஎம் சிக்கலான நிலை: ஆனால் தற்போதைய 'இந்தியா" கூட்டணியில் பட்டும் படாமலுமேயே இடதுசாரிகள் இருந்து வந்தனர். சிபிஎம் கட்சியைப் பொறுத்தவரையில் கேரளாவில் காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சி; மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சி. இந்த முரண்பாடுகளுடன் "இந்தியா" அணிக்கும் இடதுசாரி கட்சிகள் வந்தன.
பொலிட்பீரோ கூட்டம்: ஆனால் பாட்னா, பெங்களூர் கூட்டத்தில் அமைதி காத்த இடதுசாரிகள் மும்பை கூட்டத்தில் முறுகலை வெளிப்படுத்தியது. இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவில் சிபிஎம் கட்சி இடம் பெற்றிருந்தாலும் இந்த நிமிடம் வரை பெயரைத் தரவில்லை. இது தொடர்பாக கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சிபிஎம் பொலிட் பீரோ கூட்டமும் விவாதித்துள்ளது.
சிபிஎம் நிலைப்பாடுதான் என்ன?: மேலும் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அக்டோபர் 2-ந் தேதி இந்தியா கூட்டணி பொதுக் கூட்டம் நடத்த வேண்டாம் என சிபிஎம் வலியுறுத்தியதாம். அதாவது ம.பி.யில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி இருகட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. இதனால் அங்கு பொதுக் கூட்டம் நடத்துவது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பது சிபிஎம் கருத்து. இதனிடையே திடீரென மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத், ம.பி. போபால் பொதுக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என தன்னிச்சையாக அறிவித்ததையும் சிபிஎம் ஏற்கவில்லையாம். இந்த அறிவிப்பை ஒருங்கிணைப்பு குழுதானே வெளியிட வேண்டும் என்கிறது சிபிஎம்.
சிபிஎம் வெளியேறும்?: சிபிஎம் கட்சியை பொறுத்தவரை இந்தியா கூட்டணி முறையான கட்டமைப்புடன் குழப்பம் இல்லாமல் செயல்பட வேண்டும்; ஆளுக்கு ஆள் அறிவிப்பு வெளியிடக் கூடாது என்கிற கறார்தனத்தை காட்டுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ வழக்கம் போல பெரிய அண்ணன் பாணியில் செயல்படுகிறது. இதனால் இடதுசாரிகள் நீண்டகாலம் இந்தியா கூட்டணியில் இடம் பெறுவது சந்தேகமே என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.












Click it and Unblock the Notifications