கொரோனாவுக்கு இறந்தவரின் முகத்தைப் பார்க்க லஞ்சம்... உடல் மாற்றம்... எய்ம்ஸில் நடந்த கொடூரம்!!
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த இந்து மதத்தைச் சார்ந்தவரின் உடலை முஸ்லிம் குடும்பத்திடமும், முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவரின் உடலை இந்து குடும்பத்திடமும் கொடுத்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. மேலும், இறந்தவரின் முகத்தைப் பார்க்க சுடுகாட்டில் ரூ. 500 லஞ்சம் கேட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜூன் 7 ஆம் தேதி காலை இங்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்து விட்டார். இவரது குடும்பத்தினருக்கு இந்த தகவலை மருத்துவமனை கொடுத்து இருந்தது. இதையடுத்து குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்களிடம், உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடு செய்யுமாறு மருத்துவமனை அறிவுறுத்தி உள்ளது. இறந்தவரின் முகத்தை இறுதியாக பார்க்க வேண்டும் என்றும் காட்டுமாறும் அவரது சகோதார் கோரிக்கை வைத்தார். சுடுகாட்டில் வைத்து காட்டுவதாக தெரிவித்து விட்டனர்.
இதையடுத்து ஒருவரை மட்டும் மருத்துவமனையில் விட்டு விட்டு மற்றவர்கள் இந்தியா கேட்டில் இருக்கும் சுடுகாட்டுக்கு சென்று ஏற்பாடு செய்தனர். மதியம் சுடுகாட்டுக்கு உடல் கொண்டு வரப்பட்டது. அப்போதும், முகத்தைக் காட்டுமாறும், இறந்தவரின் மூன்று குழந்தைகள் இறுதியாக பார்க்க விரும்புகின்றனர் என்று இறந்தவரின் சகோதரர் கேட்டுக் கொண்டார். பிளாஸ்டிக் பையால் கட்டப்பட்ட உடலை கொடுத்துள்ளனர்.
ஆனால், இந்தியா கேட் சுடுகாட்டில் இருந்த ஊழியர்கள் முகத்தைக் காட்டுவதற்கு ரூ. 500 கேட்டதாக இறந்தவரின் சகோதார் குற்றம்சாட்டியுள்ளார். இதுவல்ல விஷயமே, அவர்கள் பணம் கொடுத்த பின்னர் முகத்தை திறந்துள்ளனர். அது அவரது சகோதரியின் உடல் அல்ல. இந்து மதத்தைச் சேர்ந்தவரின் மற்றொருவரின் உடல். அவரும் பெண்தான்.
கொரோனா பாதிப்புக்குள்ளான அமைச்சர் தங்கமணி.. நேற்று முதல்வருடன் சந்திப்பு!
இன்னும் ஒரு மணி நேரத்தில் சரியான உடலை கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளனர். ஒரு மணி நேரம் காத்து இருந்த பின்னர் ஷாக்கான செய்தி கிடைத்தது. முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவரின் உடலை இந்து மதத்தைச் சார்ந்தவர்களிடம் கொடுத்துள்ளனர். அதையும் அவர்கள் பார்க்காமல் பஞ்சாபி பாக் என்ற சுடுகாட்டில் அடக்கமும் செய்து விட்டனர். இந்த செய்தியும் இந்து குடும்பத்துக்கு தாமதமாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையின் சவக்கிடங்கில் இருந்த ஒரு ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டு, மற்றொருவர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். எந்த மதத்தைச் சார்ந்தவர்களின் உடலை யார் வேண்டுமானாலும் பேதமின்றி அடக்கம் செய்யலாம், ஆனால், இதுமாதிரியான மனிதத்தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மருத்துவமனை நிர்வாகத்தின் பொறுப்பு.