டெல்லி முதல்வர் பதவியில் இருந்து 2 நாட்களில் ராஜினாமா- அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் அறிவிப்பு!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச முதல்வர் பதவியில் இருந்து அடுத்த இரண்டு நாட்களில் தாம் ராஜினாமா செய்ய இருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென அறிவித்துள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினரிடையே இன்று பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் ஆங்கிலேயர் ஆட்சியை விட மிக கொடூரமான அடக்குமுறைகளை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார். இதேபோல முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன்னர்தான் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து விடுதலையானார்.

டெல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது தமது உடல் எடை குறைந்துவிட்டது என்பது உள்ளிட்ட பல புகார்களை அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜாமீனில் விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை கட்சி அலுவலகத்தில் சந்தித்தார்.
அப்போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ஆங்கிலேயர் ஆட்சியை விட கொடூரமானது மோடி ஆட்சி. மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஆம் ஆத்மி மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.
பகத்சிங் வீரமரணம் அடைந்த 95 ஆண்டுகளுக்குப் பின்னர் சுதந்திர இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதல்வர் பாஜகவின் சதியால் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெரும் புரட்சியே நடந்திருக்கிறது. ஆகையால் மக்களிடம்தான் நாம் நீதி கேட்க வேண்டும்.
நான் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன். செப்டம்பர் 17-ந் தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாளில் என் பதவியை ராஜினாமா செய்கிறேன். மக்களை சந்தித்து அவர்களிடமே நீதியைக் கோருவோம். ஒவ்வொரு வீடு வீடாக சென்று மக்களிடம் நியாயம் கேட்கப் போகிறேன். மக்கள் புதிய தீர்ப்பு அளிக்கும் வரை இந்த முதல்வர் நாற்காலியில் அமருவது இல்லை என முடிவு செய்துள்ளேன். ஒவ்வொரு தெருத் தெருவாக, வீடு வீடாக மக்களிடம் சென்று என்ன நடக்கிறது என்பதை விவரிக்க இருக்கிறேன்.
மத்திய பாஜக அரசு, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை அரசியல் பழிவாங்கல்களுக்காக பயன்படுத்தி வருகிறது. ஆம் ஆத்மி கட்சியை அழிக்க திட்டமிட்டு செயல்படுகிறது பாஜக.
ஆம் ஆத்மி கட்சியை உடைக்க முடியாததால் என் தைரியத்தை தகர்க்க என்னை சிறைக்கு அனுப்பியது பாஜக. என்னை சிறைக்கு அனுப்பிவிட்டால் ஆம் ஆத்மியை உடைத்து டெல்லியில் ஆட்சி அமைத்துவிடலாம் என கனவு கண்டது பாஜக. ஆனால் ஆம் ஆத்மி கட்சி உடையவும் இல்லை. பாஜகவின் கனவு நிறைவேறவும் இல்லை.
சிறையில் இருந்த போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய விரும்பவில்லை. நாட்டின் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கவே ராஜினாமா செய்யாமல் இருந்தேன். ஒரு மாநில முதல்வரால் ஏன் சிறையில் இருந்து ஆட்சி நிர்வாகத்தை நடத்த முடியாது? என மத்திய அரசைப் பார்த்து கேள்வி கேட்டது உச்சநீதிமன்றம். சிறையில் இருந்தபடியே ஒரு மாநில நிர்வாகத்தை நடத்த முடியும் என நிரூபித்துவிட்டது உச்சநீதிமன்றம். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications