குஜராத்தில் அரசு பள்ளிகளை சீரமைக்க இன்னும் 15000 வருஷம் ஆகும்.. கடுமையாக அட்டாக் செய்த ஆம் ஆத்மி!
டெல்லி: குஜராத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளில் வெறும் 73 அரசு பள்ளிகளைதான் அம்மாநில பாஜக அரசு உருவாக்கியுள்ளதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
ஏற்கெனவே பலமுறை அமலாக்கத்துறை, ஆம் ஆத்மி தலைவர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தியிருந்த நிலையில் இன்றும் ரெய்டு தொடர்ந்து வருகிறது.

அரசு பள்ளிகள்
குஜராத் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரம் குறித்து ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது குறித்து டெல்லி துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி தலைவர்களுள் ஒருவருமான மணீஷ் சிசோடியா, "குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளில் வெறும் 73 அரசு பள்ளிகளைதான் அம்மாநில பாஜக அரசு உருவாக்கியுள்ளது" என்று கூறியுள்ளார்.

15,000 ஆண்டுகள்
மேலும், "பாஜக டெல்லி யூனியன் பிரதேச தலைவர் சிஆர் பாட்டீல் இந்த பள்ளிகளுக்கு அழைத்து சென்று காண்பிப்பார் என்று நம்புகிறேன். தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 40,800 அரசு பள்ளிகளின் தரம் மோசமாக உள்ளது. இதனை சரிசெய்து தரம் உயர்த்த எப்படியும் 15,000 ஆண்டுகள் ஆகும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் டெல்லி அரசின் பள்ளிகள் உலகத் தரத்திற்கு இணையாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இதே மாற்றத்தை குஜராத் மக்களும் விரும்புகின்றனர்" என்று சிசோடியா கூறியுள்ளார்.

டெல்லி பள்ளிகள்
ஆனால் பாஜகவினர் சிசோடியாவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளில் 84% முதல்வர், 34% துணை முதல்வர், 40% TGT ஆசிரியர், 22% PGT ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இன்னமும் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன. இவ்வாறு இருக்கையில் சிசோடியா மற்ற மாநிலங்களை பற்றி கவலை தெரிவித்துள்ளார்." என்று டெல்லி பாஜக தலைவர்களில் ஒருவரான ஆதேஷ் குப்தா கூறியுள்ளார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஒருவரையொருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர்.

ரெய்டு
இவ்வாறு மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், தற்போது அமலாக்க இயக்குநரகம் டெல்லி அரசுக்கு எதிராக இன்று மீண்டும் ரெய்டை தொடங்கியுள்ளது. டெல்லி கலால் கொள்கை 2021-2022ஐ அமல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக டெல்லி துணைநிலை ஆளுநர் சிபிஐ விசாரணை கோரியிருந்தார். இதனையடுத்து மணிஷ் சிசோடியாவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும் இதுவரை 100க்கும் அதிகமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. தற்போது இதனைத் தொடர்ந்து மேலும் 35 இடங்களில் அமலாக்கத்துஏஐ இன்று ரெய்டு மேற்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications