மதுபான கொள்கை ஊழல்: கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவால் மனு- சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தம்மை கைது செய்ததற்கு எதிராக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சிபிஐ பதில் மனுத் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சிபிஐ கைது செய்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கவும் உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. சிபிஐ கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்ததாக கூறி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, தெலுங்கானா எம்.எல்.சி. கவிதா உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். இதன் அடுத்த கட்டமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் இந்த முறைகேட்டில் ஆதாயம் அடைந்ததாக குற்றப்பத்திரிகையில் சேர்த்தது அமலாக்கத்துறை.

டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூன் 26-ந் தேதி சிபிஐயும் கைது செய்தது. அமலாக்கத்துறையின் வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் திடீரென சிபிஐ அவரை கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிபிஐ-ன் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, வழக்குகளில் இருந்து கெஜ்ரிவால் ஜாமீனில் வெளியே வருவதைத் தடுக்கத்தான் சிபிஐ கைது செய்திருக்கிறது என்றார். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில், சிபிஐ கைது செய்ததற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்த் வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கவும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அண்மையில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து தெலுங்கானா எம்.எல்.சி. கவிதாவுக்கும் ஜாமீன் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் மட்டும் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications