கரைபுரண்டோடும் யமுனை.. டெல்லி நகருக்குள் பாய்ந்தது- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடும் தப்பவில்லை!
டெல்லி: யமுனை நதியில் வரலாறு காணாத வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. அபாய அளவை தாண்டி பெருக்கெடுத்து ஓடும் யமுனை நதி டெல்லி மாநகருக்குள் பாய்ந்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு உள்ள பகுதியும் யமுனை வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.
வட இந்திய மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் மழை கொட்டி தீர்ப்பதால் எங்கெங்கும் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளம் பாய்ந்தோடுகிறது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் பெருமளவு நீர் திறந்துவிடப்படுகிறது.

கனமழையால் யமுனை நதியில் வெள்ளம் அதிகரித்திருக்கும் நிலையில் ஹரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து தொடர்ந்து அதிகளவு நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் யமுனை நதியின் நீர்மட்டம் 208.46 அடியாக அதிகரித்தது. அபாய அளவை தாண்டி 3 மீட்டர் அதிகமாக பாய்ந்தோடும் யமுனை நதிநீர் இப்போது டெல்லி மாநகருக்குள் திரும்பியிருக்கிறது. இதனால் டெல்லி மாநகரில் யமுனை நதிகரையோர பகுதிகள் பெரும்பகுதி நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே ஹரியானாவின் தடுப்பணை நீரை திறந்துவிடுவதை நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் மத்திய அரசோ, உபரி நீரை திறக்காமல் என்னதான் செய்வது? என ஹரியானாவுக்கு ஆதரவான பதிலை சொன்னது.
தற்போது டெல்லியில் பல பகுதிகள் வெள்ள நீரில் மிதக்கின்றன. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு உள்ள பகுதியும் யமுனை வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. டெல்லி சட்டசபையை நோக்கியும் யமுனை நதி வெள்ள நீர் பாய்ந்து கொண்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் இதுவரை 16,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். டெல்லியில் யமுனை நதி வெள்ளம் சூழக் கூடிய பகுதிகளைக் குறிப்பிட்டு அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என தொடர்ந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்து வருகிறது. டெல்லி மாநகருக்குள் யமுனை நதிநீர் பாய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
மேலும் டெல்லியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதற்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications