டெல்லி அனுமன் ஜெயந்தி ஊர்வல வன்முறை: 5 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது
டெல்லி வன்முறையில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
டெல்லி: அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது தலைநகர் டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டம் ஒருவரை எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாமல் ஒரு வருடம் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.
Recommended Video
டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஊர்வலம் செல்லும் வழியில் மற்றொரு பிரிவினருடன் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கினர். தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறின.

போலீஸ் வாகனங்கள் தீ வைப்பு
வன்முறை குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், இரு தரப்பையும் கலைந்து போக நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அவர்கள் மீதும் கற்கள் வீசி தாக்கப்பட்டது. அத்துடன் போலீசாரின் வாகனம் உள்பட பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

துப்பாக்கிச்சூடு
அத்துடன் கலவரக்காரர் ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் சப்இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்தார். இந்த பயங்கர வன்முறை சம்பவத்தில் 8 போலீசார் உள்பட 9 பேர் காயமடைந்தனர். அத்துடன் ஏராளமான பொருட்களும் சேதப்படுத்தப்பட்டன.

டெல்லியில் பதற்றம்
வன்முறையால் தலைநகர் டெல்லியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அத்துடன் சம்பவ இடத்தில் பதற்றத்தை தணிக்க போலீசார் கொடி அணிவகுப்பு, ரோந்து என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். டிரோன் கேமரா மூலமும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

5 பேர் தேதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது
கலவரத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான அன்சார், உள்பட 22 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 2 பேர் சிறுவர்கள் ஆவர். இந்த நிலையில், அன்சார் உள்பட கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டம் ஒருவரை எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாமல் ஒரு வருடம் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.












Click it and Unblock the Notifications