6 ஆண்டுகள் தேர்தலில் மோடி போட்டியிட தடை விதிக்க கோரிய மனு டெல்லி ஹைகோர்ட்டில் டிஸ்மிஸ்!
டெல்லி: பிரதமர் மோடி நாட்டின் தேர்தல்களில் 6 ஆண்டுகள் போட்டியிட தடை விதிக்கக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் மதம், கடவுளின் பெயரால் மோடி வாக்கு சேகரிப்பதால் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என கோரி பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனந்த் எஸ் ஜோந்தலே ஒரு பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். கடந்த ஏப்ரல் 15-ந் தெதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இப்பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கறிஞர் ஆனந்த் ஜோந்தலே தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: லோக்சபா தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. ஆனால் பிரதமர் மோடி இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்களை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துகிறார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, இந்து தெய்வங்கள்- இந்து வழிபாட்டு தலங்கள்- சீக்கிய வழிபாட்டுத் தலங்களைக் குறிப்பிட்டு பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
பிரதமர் மோடி மதத்தின் பெயரால் வாக்கு சேகரிப்பது என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது. ஆகையால் பிரதமர் மோடி அடுத்த 6 ஆண்டுகள் எந்த தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு ஆனந்த் ஜோந்தலே தமது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவில், "வாக்குகளைப் பெற ஜாதி, சமூக உணர்வுகளைத் தூண்டி சமூக உணர்வுகளுக்கு எதிராக பிரசாரம் செய்யக் கூடாது என்கிறது அரசியல் சாசனம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்" எனவும் சுட்டிக்காட்டி இருந்தார் ஆனந்த் ஜோந்தலே.
இம்மனு கடந்த ஏப்ரல் 26-ந் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பில் சென்றதால் விசாரணை நடைபெறவில்லை.
இதனையடுத்து இன்று ஆனந்த் ஜோந்தலே மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி சச்சின் தத்தா, இப்படித்தான் செயல்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது; ஆகையால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications