டெல்லி ஜாமியா வன்முறை.. மாணவர்கள் அல்லாத 10 பேரை அதிரடியாக கைது செய்தது போலீஸ்
டெல்லி: டெல்லி ஜாமியாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறை தொடர்பாக மாணவர்கள் அல்லாத 10 பேரை டெல்லி போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தேசிய குடியுரிமை சட்டம் கொண்டுவந்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் அமைப்பு மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் ஆகியவை தெற்கு டெல்லியில் உள்ள ஜாமியா நகரில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினர்.
டெல்லியின் மதுரா சாலை, நியூ பிரண்ட்ஸ் காலனி, ஜாமியா நகர் மற்றும் சாராய் ஜூலேனா ஆகிய இடங்களில் 1,000 போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.

கண்ணீர் புகை குண்டு
பின்னர் இந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது.போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். இதனால் அந்த இடமே போர்களமாக மாறியது.

மாணவர்கள் சிறை
இதில் ஆறு பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டது. இந்த சம்பவங்களை அடுத்தே போலீசார் அடுத்து இந்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். அதன்பின்னர் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை பிடித்துச்சென்ற அடைத்து வைத்தனர். பின்னர் அதிகாலை 3.30 மணி அளவில் அனைவரையும் விடுவித்தனர்

நாடு முழுவதும்
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துதான் நாடு முழுவதும் தற்போது மாணவர்களின் போராட்டம் உருவெடுத்துள்ளது. பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் இல்லை
இந்த சூழலில் டெல்லி ஜாமியாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறை தொடர்பாக மாணவர்கள் அல்லாத 10 பேரை டெல்லி போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications