"விதிமீறல்.." அனைத்து ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் மீதும் நடவடிக்கை! டெல்லி மழையால் 3 பேர் பலி- மேயர் பரபர
டெல்லி: டெல்லியில் தொடர்ந்து கனமழை கொட்டி வரும் நிலையில், அங்கே பேஸ்மெண்டில் இயங்கி வந்த தனியார் ஐஏஎஸ் அகாடமி நீரில் மூழ்கியது. இந்தச் சம்பவத்தில் அங்கிருந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு பேஸ்மெண்டில் இயங்கும் அனைத்து பயிற்சி மையங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க டெல்லி மேயர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே தலைநகர் டெல்லியில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்கே பல்வேறு இடங்களும் மழை நீரில் மூழ்கி இருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.

நீரில் மூழ்கிய ஏஐஎஸ் அகாடமி: கனமழையால் டெல்லியின் ராஜேந்திர நகரில் உள்ள கட்டிடம் ஒன்றின் அடித்தளத்தில் மழை காரணமாக நீர் சூழ்ந்து இருக்கிறது. இதனால் அங்கு பேஸ்மெண்டில் இயங்கி வந்த ஐஏஎஸ் அகாடமி முழுமையாக நீரில் மூழ்கியது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
இருப்பினும், பல மணி நேரம் முயன்றும் மாணவர்களை மீட்க முடியவில்லை. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்கள் தானியா சோனி (25), ஸ்ரேயா யாதவ் (25), நெவின் டால்வின் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளது. வெள்ளம் அதிகரிக்கும் போது அங்கிருந்து சுமார் 30 பேர் சரியான நேரத்தில் வெளியேறிவிட்டனர்.. இல்லையென்றால் நிலைமை மிக மோசமாகச் சென்றிருக்கும்.
வழக்குப்பதிவு: இதற்கிடையே இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ராவ் ஐஏஎஸ் அகாடமி உரிமையாளரை இப்போது போலீசார் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 105, 106(1), 115/2, 290 மற்றும் 35 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. மேலும், இதில் தவறு செய்தவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சாடியுள்ளது. அதேநேரம் பாஜக இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள கழிவுநீர் பாதையைச் சுத்தப்படுத்த வேண்டும் எனப் பல முறை கோரிக்கை விடுத்தும் ஆம் ஆத்மி அரசு தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதுவே மாணவர்கள் உயிரிழப்பிற்குக் காரணம் என்றும் சாடியுள்ளது.
டெல்லி மேயர்: இப்படி இரு கட்சிகளும் மாறி மாறி விமர்சித்து வரும் நிலையில், டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் இப்போது மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதாவது டெல்லியில் கட்டிடங்களின் பேஸ்மெண்டில் இயங்கும் அனைத்து பயிற்சி மையங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார். இதுபோல பேஸ்பெண்ட்களில் இயங்கும் பயிற்சி மையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவர் டெல்லி மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்..
இதுபோன்ற பயிற்சி மையங்கள் கட்டிட விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும் என்றும் அவர் சாடியுள்ளார். அதாவது டெல்லியில் பேஸ்மெண்டில் இதுபோன்ற பயிற்சி மையங்கள் இயங்குவது விதி மீறல் என்பதால் அவை மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவத்திற்கும் டெல்லி அதிகாரிகளுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பதை அடையாளம் காண உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் டெல்லி மேயர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications