"பிரியாணி ரெடி.." தீவிரவாதிகள் அனுப்பிய கோட் வேர்ட்.. உடனே அரங்கேறிய டெல்லி கொடூரம்!
டெல்லி: தலைநகர் டெல்லியில் திங்கள்கிழமை நடந்த கார் வெடிப்பில் பலர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே தாக்குதல் தொடர்பாக டிஜிட்டில் சாட் பாக்ஸ்களில் கோட் வார்த்தை மூலம் தீவிரவாதிகள் பேசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
டெல்லியில் செங்கோட்டை அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த பயங்கர கார் வெடிப்பு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் வெடிப்பில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்தனர். இது ஒரு தனிநபரின் செயல் அல்ல, மாறாக ஒரு பெரிய பயங்கரவாத வலையமைப்பின் சதியாக இருக்கக்கூடும் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விசாரணை
இந்த வழக்கை முதலில் போலீசார் விசாரித்த நிலையில், பின்னர் இது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள் இந்த கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியே வருகிறது. பயங்கரவாதிகள் தங்கள் உரையாடல்களை மறைக்க, கோட் வார்த்தைகளைப் பயன்படுத்தியது இப்போது தெரிய வந்துள்ளது. இந்த கோட் வார்த்தைகள் மிகவும் சாதாரணமாகத் தோன்றினாலும், அவற்றுக்குள் தான் சதி மறைந்து கிடந்துள்ளது..
பிரியாணி ரெடி
உதாரணமாக, 'விருந்துக்குப் பிரியாணி ரெடி..' பார்க்கச் சாதாரணமாகத் தெரியும் இந்த மெசேஜ் தான் டெல்லி கார் வெடிப்பில் கோட் வார்த்தையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.. டெல்லி வெடிப்பு தொடர்பாகச் சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், அதில் தான் இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அந்த டிஜிட்டல் சாட்பாக்ஸில், பயங்கரவாதிகள் தங்கள் முழுத் திட்டத்தையும் கோட் வார்த்தைகளில் விவரித்திருந்தனர்.
'விருந்து' என்பது குண்டுவெடிப்பு அல்லது தாக்குதலையும், 'பிரியாணி' என்பது வெடிபொருளையும் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சைபர் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க இந்தத் தந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். ஷாஹீன் என்பவரால் இந்த மெசேஜ் அனுப்பப்பட்டது. என்ஏஐவின் டிஜிட்டல் தடயவியல் விசாரணையில் இந்தத் தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஷாஹீன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடமும் விசாரணை தொடர்கிறது.
தீவிரவாத தொடர்பு
இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பாகிஸ்தான் ஆதரவு குழுக்களின் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சைபர் பிரிவு சாட்பாக்ஸில் பேசப்பட்ட மற்ற விஷயங்கள் குறித்தும் இப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து பல சந்தேக நபர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
எதிர்பார்க்காத சம்பவம்
கடந்த திங்கள்கிழமை நடந்த தாக்குதல் திட்டமிடப்பட்ட தாக்குதல் இல்லை என்றே முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. அதாவது அதற்குச் சில மணி நேரத்திற்கு முன்பு தான் உபி, ஹரியானா மாநிலங்களில் இருந்து ஒயிட் காலர் தீவிரவாத அமைப்பை போலீசார் பிடித்தனர்.. ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கெமிக்கல் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் காரணமாகப் பயத்தில் வெடிகுண்டை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் சென்றிருக்கலாம் என்றும் அப்போது வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். கார் வெடிப்பு தொடர்பான சிசிடிவி காட்சிகளிலும் கூட கார் மெல்லச் சென்று கொண்டிருந்தபோது வெடித்துச் சிதறியது போலவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications