குடியரசு தினம் டார்கெட்! தீவிரவாதிகள் திட்டம் அம்பலம்! முன்கூட்டியே டெல்லி கார் வெடிப்பு நடந்தது ஏன்
டெல்லி: தலைநகர் டெல்லியில் திங்கள்கிழமை நடந்த கார் வெடிப்பு நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தீபாவளி அல்லது குடியரசு தினத்தின்போது தான் நாசவேலை நடத்தத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வெடி பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது அது தற்செயலாக வெடித்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
கடந்த திங்கள்கிழமை டெல்லியில் மிக மோசமான ஒரு கார் வெடிப்பு ஏற்பட்டது. செங்கோட்டை அருகே நடந்த இந்தச் சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து இப்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். டெல்லி கார் வெடிப்பு விவகாரம் தொடர்பாக போலீசார் இதுவரை சிலரைக் கைது செய்துள்ளனர்.

பகீர் தகவல்
அவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ டெல்லி கார் வெடிப்பில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்றே போலீசார் சந்தேகிக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ஃபரிதாபாத்தில் செயல்பட்டு வந்த ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய டாக்டர் முஸம்மில் கனாய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்.. இந்த டெல்லி கார் வெடிப்பை நிகழ்த்திய டாக்டர் உமர் முகமது உடன் சேர்ந்து செங்கோட்டை பகுதியைக் கடந்த ஜனவரி மாதமே நோட்டமிட்டதாகக் கூறியிருக்கிறார். இது ஒரு பெரிய பயங்கரவாத சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருத்தாடுகிறது..
குடியரசு தினம் அல்லது தீபாவளி
டாக்டர் முஸம்மில் செல்போனில் இருந்து மீட்கப்பட்ட டேட்டாவை வைத்தே அதிகாரிகள் இதைக் கண்டுபிடித்துள்ளனர். முதலில் கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று செங்கோட்டையைத் தாக்கத் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படி இல்லை என்றால் தீபாவளியன்று மக்கள் அதிகம் கூடும் இடத்தைத் தாக்க அந்த அமைப்பு திட்டமிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பின் டைமிங்கும் முக்கியமாகப் பார்க்க வேண்டி உள்ளது. ஏனென்றால் ஜம்மு-காஷ்மீர், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சர் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒயிட் காலர் தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். மொத்தம் மூன்று மருத்துவர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தக் கைது நடந்து சில மணி நேரத்தில் கார் வெடிப்பு நடந்துள்ளது.
தீவிரவாதிகளுடன் தொடர்பு!
அந்தக் காரை ஓட்டிச் சென்றது டாக்டர் உமராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். உமருக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் கைது செய்யப்பட்ட மற்ற டாக்டர்களான முஸம்மில் மற்றும் ஆதில் அகமது தார் ஆகியோரும் இதில் தொடர்பு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்செயலாக வெடிப்பு
செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான முதற்கட்ட விசாரணையில், வெடிபொருள் அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டபோது தற்செயலாக வெடித்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. அதாவது பல்வேறு மாநிலங்களிலும் இயங்கிய ஒயிட் காலர் தீவிரவாதிகளை போலீசார் பிடித்தனர். இதனால் பதறிய தீவிரவாதிகள், வெடிகுண்டை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றனர் என்றும் அப்போது குண்டு வெடித்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் மேலும் கூறுகையில், "வெடிகுண்டு முழுமையாகத் தயாரிக்கப்படவில்லை.. இதன் காரணமாகவே அதன் தாக்கம் குறைவாகவே இருந்தது. குண்டுவெடிப்பின் காரணமாக அங்குப் பள்ளம் எதுவும் ஏற்படவில்லை.. மேலும், அதில் இருந்து எந்தவொரு எறி பொருட்கள் வெடித்து சிதறவில்லை. இதன் மூலம் வெடிகுண்டு முழுமையாக ரெடியாகும் முன்பே வெடித்துச் சிதறியிருப்பது உறுதியாகத் தெரிகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications