போர்க்களமான மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்- பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகை- போலீஸ் குவிப்பு!
டெல்லி: பாலியல் தொல்லை தந்த மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் கைது செய்யப்பட வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் நடத்தி வரும் டெல்லி போராட்டம், போர்க்களமாக உருமாறி இருக்கிறது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக டெல்லியை இன்று பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டிருப்பதால் பதற்றம் நிலவுகிறது.

பாஜக எம்பி பிரிஜ் பூஷண் உள்ளிட்ட மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகள் மீது நாட்டுக்கு பெருமை தேடி தந்த மல்யுத்த வீராங்கனைகள் பொதுவெளியில் பகிரங்கமாக பாலியல் அத்துமீறல் புகார்கள் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தங்களுக்கு நீதி கோரி டெல்லி வீதிகளில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது மத்திய அரசு. இந்த கமிட்டி அறிக்கை என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது. இதனால் தங்களுக்கு நீதி கோரி 7 மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பிரிஜ் பூஷணுக்கு எதிராக கடுமை காட்டியது. பிரிஜ் பூஷணுக்கு எதிராக ஒரு வழக்கு கூட ஏன் பதிவு செய்யவில்லையே என கேள்வி கேட்டது.
இதனால் பிரிஜ் பூஷண் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுவிடும் என உறுதி மொழி அளித்தது மத்திய அரசு. இதனடிப்படையில் பிரிஜ் பூஷண் மீது இரு பிரிவுகளில் வழக்கு செய்ததாக டெல்லி போலீஸ் தெரிவித்தது. ஆனாலும் தங்களது கோரிக்கையை ஏற்று பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க கோரி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்துகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் கடும் போலீஸ் நெருக்கடிக்கு மத்தியிலும் போராட்டங்களை தொடருகின்றனர். இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு உலகை உலுக்கிய டெல்லி போராட்டத்தை நடத்திய விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. அத்துடன் வட இந்திய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் இணைந்து கொள்வர் எனவும் அறிவித்தது.
இதனயடுத்து பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லி எல்லைகளை இன்று அதிகாலையிலேயே முற்றுகையிட்டனர். ஆனால் டெல்லி போலீசார் விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் டெல்லி எல்லைகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. மேலும் டெல்லி ஜந்தர் மந்தரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications