இஷ்டப்படி இனி ஆட முடியாது டொனால்ட் ட்ரம்ப்.. ஜனநாயக கட்சி வெற்றியால் உலக நாடுகள் நிம்மதி
டெல்லி: அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இடைக்கால தேர்தலில் வென்றதன் மூலம் ஜனநாயக கட்சி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க மிட்டர்ம் தேர்தலில், கடந்த எட்டு ஆண்டுகளில் முதல்முறையாக அந்நாட்டின் கீழவையை கைப்பற்றியுள்ளது, ஜனநாயக கட்சி. இந்த வெற்றியின் மூலம், அதிபர் டிரம்ப் இனிமேல் அவரது இஷ்டப்படி நடவடிக்கைகளை எடுக்க முடியாது.
அமெரிக்க காங்கிரஸ் என்பது செனட் என்ற மேலவை மற்றும் மற்றும் பிரதிநிதிகள் சபை அதாவது கீழவை என்ற இரு அவைகளைக் கொண்டது.
லோக்சபா போன்ற அதிகாரம்
இதில் பிரதிநிதிகள் சபை என்பது அதிகாரம் அதிகமாக கொண்டது. இந்தியாவில் ராஜ்யசபாவைவிட, லோக்சபாவிற்கு அதிகாரம் எப்படி அதிகமோ அதேபோன்றுதான் அங்கும் கூட. செனட்டில் ட்ரம்ப் கட்சி ஆதிக்கம் செலுத்தினாலும், முக்கியமான சட்டங்கள், கொள்கை முடிவுகளை கீழவை எடுக்கும் என்பதால், அங்கு ஜனநாயக கட்சி ஆதிக்கம்தான்.
வணிக யுத்தம்
அதேநேரம், அமெரிக்க வல்லுநர்கள் கணிப்புப்படி, சீனாவுக்கு எதிரான டொனால்ட் ட்ரம்பின் 'வணிக யுத்தத்திற்கு', ஜனநாயக கட்சி தடைபோடாது என்றே தெரிகிறது. இதற்கு காரணம், அது அதிபரின் சிறப்பு அதிகாரத்திற்கு உட்பட்ட முடிவு என்பதோடு, ஜனநாயக கட்சியும் கூட சீனாவுக்கு எதிரான வணிக நிலைப்பாட்டை எடுத்து வருவது காரணம் என்று அந்த நாட்டு அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
அதிரடிக்கு தடை
அதேநேரம், ஈராக் மீது சமீபத்தில் ட்ரம்ப் விதித்த பொருளாதார தடை போன்ற விவகாரங்களை இனிமேல் அவர், இஷ்டப்படி செய்ய முடியாது. ஒரு வேகத்தடை போல ஜனநாயக கட்சி இருக்கும் என்கிறார்கள். பிற நாடுகளை மிரட்டும் ட்ரம்ப் செயல்பாட்டை, கீழவையில் ஜனநாயக கட்சி பெற்ற பெரும்பான்மை தடுத்து நிறுத்தும் என்பது அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது.
நிம்மதி
ஜனநாயக கட்சி வெற்றியின் மூலம், பல உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளன. ட்ரம்ப் எனும் முரட்டு குதிரைக்கு ஜனநாயக கட்சியின் வெற்றி என்பது கடிவாளம் போட்டதை போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.