கலக்கிட்டாரு கெஜ்ரிவால்.. வாட் வரி பாதியாக குறைப்பு.. டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.8 சரிவு
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் அரசு டீசல் மீதான வாட் வரியை குறிப்பிடத்தக்க அளவு குறைத்துள்ளது. இதனால் டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் 36 காசுகள் குறைந்துள்ளது.
ஒரு பக்கம், கொரோனா வைரஸ் தொடர்பான, ஊரடங்கு காரணமாக மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். மறுபக்கம், பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் சாமானியர்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை கடுமையாக அவதிப்படுகிறார்கள். குறிப்பாக, வாகன போக்குவரத்து பல பகுதிகளிலும் துவங்கி விட்டால் இந்த காலகட்டத்தில் அவ்வப்போது பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றை நிரப்புவதற்கு அதிகமாக பணம் செலவிட வேண்டிய தேவை ஏற்படுகிறது. எனவே, மக்கள் அதிருப்தியில் இருந்தனர்.
வைரல் வீடியோ.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்.. கனநிமிடத்தில் தப்பிய இருவர்!
கெஜ்ரிவால் சூப்பர்
டீசல் விலை உயர்வு காரணமாக சரக்கு லாரிகளில் போக்குவரத்து செலவு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இது அத்தியாவசிய பொருட்களின் விலையையும் அதிகரித்து விடும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒரு பக்கம் பொருளாதார சரிவு, மறுபக்கம் பெட்ரோல் டீசல் விலைவாசி உயர்வு என இரண்டு பக்க இடர்பாடுகளால் மக்கள் அவதிப்படும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அதிரடி முடிவை அறிவித்துள்ளார்.
டெல்லி அரசு அசத்தல்
பெட்ரோல் டீசல் போன்ற எரி பொருள் மீது மாநில அரசு வாட் வரி விதிக்கிறது அல்லவா.., அந்த வாட் வரி விதிப்பு டெல்லியில் 30 சதவீதம் என்ற அளவுக்கு இருந்தது. அதை 16.75% என்ற அளவுக்கு அதிரடியாக குறைத்து உத்தரவிட்டுள்ளார் கெஜ்ரிவால்.
வாட் வரி பாதியாக குறைப்பு
வாட் வரி கிட்டத்தட்ட பாதியாக குறைக்கப்பட்டு விட்டதால், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 8 ரூபாய் 36 காசுகள் என்ற அளவுக்கு குறைந்து விடும். 82 ரூபாய் என்ற அளவுக்கு ஒரு லிட்டர் டீசல் டெல்லியில் விற்பனையாகியது. அது இனிமேல், 73 ரூபாய் 64 காசுகளாக குறையும். மக்களின் இடர்பாடு காலத்தில் கை கொடுத்து அசத்தியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
தமிழகம் பரிசீலிக்குமா
இதே போன்று பிற மாநிலங்களும் வாட் வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே எழுந்துள்ளது. அவ்வாறு குறையும் பட்சத்தில் சரக்கு வாகனங்களின் போக்குவரத்து செலவு குறைவதோடு தனியார் வாகனங்களுக்கான எரிபொருள் செலவும் குறையும். ஒரு லிட்டருக்கு 8 ரூபாய் குறைகிறது என்பது மொத்தமாக எரிபொருள் டேங்க் நிரப்பும்போது மொத்த தொகையில் நல்ல ஒரு கணிசமான வித்தியாசத்தை கொடுக்கக்கூடியது. இதை அனைத்து மாநில அரசுகளும் பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக, தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.