என்ன அஸ்வின் நியாயமா இது..? சிறு பிள்ளைத்தனம்.. கலாய்க்கும் ரசிகர்கள்..மோர்கனுடனான மோதல் பின்னணி!
டெல்லி: என்ன அஸ்வின் நியாயமா இது.. என்று சார்பட்டா பரம்பரை திரைப்பட துரைக்கண்ணு மாதிரி இரு கைகளையும் விரித்து கேள்வி எழுப்புகிறார்கள் ரசிகர்கள்.
Recommended Video
கிரிக்கெட் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புக்கு மாறாக அஸ்வின் தொடர்ந்து நடந்து கொள்வது.. அதாங்க.. சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்வதுதான் பஞ்சாயத்து பெரிதாக காரணமாகிவிட்டது.
நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும், இதே மாதிரிதான் ஒரு விஷயத்தை செய்து, மோர்கன் கோபத்திற்கு ஆளாகினார் அஸ்வின். மேலும், அஸ்வின் செய்தது தவறுதான் என்று டெல்லி ரசிகர்களில் கணிசமானவர்கள் கூட கூற ஆரம்பித்துள்ளனர்.

டெல்லி-கொல்கத்தா அணிகள்
விஷயம் இதுதான்.. டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணி, 10 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

அஸ்வின் ஓடிய ரன்
டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தபோது, வெங்கடேஷ் வீசிய 19வது ஓவரின் கடைசிப் பந்தை ரிஷப் பந்த் எதிர்கொண்டார். ரிஷப் பந்த் ஒரு ரன் எடுக்க ஓடும்போது, திரிபாதி ஃபீல்டிங் செய்து பந்தை எறிந்தார். அது ரிஷப்பந்தின் உடலில் பட்டு வேறு பக்கம் சென்றது. இதைப் பார்த்த ரிஷப் பந்த்தை 2வது ரன் ஓட கட்டாயப்படுத்தி ஓட வைத்தார். ஸ்கோர் குறைவாக இருந்த நிலையில் கூடுதலாக சேர்த்த அந்த 1 ரன்னும் வெற்றிக்கு உதவும் என்று அஸ்வின் நினைத்து இவ்வாறு செய்தார்.

உடலில் பட்ட பந்துக்கு ரன் ஓடக் கூடாது
அதேநேரம், ஃபீல்டர் எறியும் பந்து பேட்ஸ்மேன் உடலில் பட்டுவிட்டால் அடுத்த ரன் ஓடுவதை பேட்ஸ்மேன்கள் தவிர்ப்பார்கள். இது ஒரு ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப். அதாவது தார்மீகம். ஓடலாம் என்று விதிமுறை அனுமதித்தாலும், நமது வீரர் மீது பந்து பட்டு போனதற்காக நாமே ரன் ஓடனுமா என்று நினைத்து ஓட மாட்டார்கள். ஆனால் அஸ்வின் அதை செய்ய வைத்தார்.

அஸ்வின்-மோர்கன் வாக்குவாதம்
இந்த நிலையில்தான், டிம் சவுதி வீசிய 20 ஓவரின் முதல் பந்தில் அஸ்வின் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அஸ்வின் வெளியேறும்போது சவுதி அவரிடம் ஏதோ கூறினார். அதற்கு அஸ்வின் பதிலுக்கு ஏதோ வார்த்தை கூற வாக்குவாதம் நடந்தது. குறுக்கே விலக்கி விட வந்த கொல்கத்தா கேப்டன் மோர்கனும், அஸ்வினுடன் வாய் தகராறு செய்தார். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஓடி வந்து அஸ்வினிடம் தமிழில் பேசி சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

தினேஷ் கார்த்திக் பேட்டி
இந்த மோதலுக்கு என்ன காரணம் என்ற தகவல் தினேஷ் கார்த்திக் வாயிலிருந்து பின்னர் அளித்த பேட்டியின்போது, "அதிகாரப்பூர்வமாக" வெளியாகியுள்ளது. பேட்ஸ்மேன் மீது பட்டு போன பந்துக்கும் கூடுதலாக 1 ரன்னை அஸ்வின் ஓடியதுதான் மோதலுக்கு காரணம் என்று அவர் தெரிவித்தார்.

அஸ்வினின் தார்மீகம் இல்லாத ரன் அவுட்
கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஒரு போட்டியின்போது டெல்லி அணிக்காக பந்துவீசிய அஸ்வின், மன்கட் (mankad) என்ற முறையில் அவுட் செய்து விடுவதாக ஆரோன் பிஞ்சுக்கு எச்சரிக்கை விடுத்தார். போட்டிக்கு பிறகு அளித்த பேட்டியில் பந்து வீசுவதற்கு முன்பாகவே இந்த பக்கமாக நிற்கும் ஆரோன் பின்ச் ஓட ஆரம்பித்து விடுகிறார். அதை எச்சரிப்பதற்காக அவ்வாறு செய்தேன் என்று தெரிவித்தார். ஆனால் 2019ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பட்லர் கிரீசை விட்டு வெளியேறிய போது இதே முறையில் அவரை அஸ்வின் அவுட் செய்துவிட்டார். இதுவும் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் கிடையாது என்ற சர்ச்சை எழுந்தது. மீண்டும் மீண்டும் பெருந்தன்மை காட்டாமல் அஸ்வின் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ரசிகர்களால் கிண்டல் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications