"உக்ரைன் போர்.. நாடு திரும்பிய மாணவர்களுக்கு என்ன திட்டம்?" மக்களவையில் குரல் கொடுத்த டிஆர் பாலு!
டெல்லி: உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் எதிர்காலம் குறித்து திமுக எம்பி டிஆர் பாலு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப். 24ஆம் தேதி போரைத் தொடங்கியது. கடந்த சில வாரங்களாகவே உக்ரைன் எல்லையில் பதற்றம் அதிகரித்து வந்த போதிலும், இப்படி முழு வீச்சில் போரைத் தொடங்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
இந்தப் போரை அடுத்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. இருப்பினும், போரை இதுவரை முடியவில்லை,

இந்திய மாணவர்கள்
இந்தப் போர் காரணமாக உக்ரைன் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதேபோல உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்கச் சென்ற இந்திய மாணவர்களும் போர் காரணமாகத் தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உக்ரைன் அண்டை நாடுகளான போலந்து, ஹங்கேரி நாடுகள் வழியாகத் தாயகம் அழைத்து வரப்பட்டனர். போர் தொடங்கிய சமயத்தில் அங்கு 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இருந்த நிலையில், இப்போது கிட்டதட்ட அனைவரும் அங்கிருந்து தாயகம் திரும்பி உள்ளனர்.

படிப்பு பாதிப்பு
போர் எப்போது முடிவுக்கு வரும் என்றே சொல்ல முடியாத நிலை தான் இப்போதும் உள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் போதிலும், அதில் உடன்பாடு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. உக்ரைன் நகரின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் இப்போது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள் கல்வி கற்பது பாதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கடிதம்
இது தொடர்பாகத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி இருந்தார். அதில் போர் தொடங்கியதில் இருந்து, உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய மாணவர்களின் படிப்பு சீர்குலைந்துள்ளதாகவும், அவர்களின் எதிர்காலம் அச்சுறுத்தலில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், தற்போது நிலவும் சூழ்நிலையில், இந்த மருத்துவ மாணவர்கள் உக்ரைனில் உள்ள தங்கள் கல்லூரிகளுக்குத் திரும்புவதும், படிப்பைத் தொடர்வதும் நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் அம்மாணவர்கள் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தங்களது படிப்பைத் தொடர உடனடியாகத் தீர்வு காண வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி
நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இப்போது தொடங்கி உள்ள நிலையில், திமுக எம்பி டிஆர் பாலு இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பி உள்ளார். உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய இந்திய மாணவர்களுக்கு மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். மேலும், ரஷ்யாவுடன் இந்திய அரசுக்கு இருக்கும் உறவைப் பயன்படுத்தி இந்த மாணவர்கள் ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில ஏற்பாடு செய்யப்படுமா என்றும் கேட்டார்.

பிஎஃப் வட்டி விகிதம்
அதேபோல் பிஎஃப் வட்டி விகித குறைப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தினர். 2021-222 ஆம் நிதியாண்டில் பிஎஃப் என்று அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.1 சதவீதக் குறைத்து வழங்கத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்குத் தான் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பட்ஜெட் கூட்டத்தில் வரும் நாட்களிலும் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
மேலும், திங்கள்கிழமை மாலை நீட் விலக்கு மசோதா தொடர்பாக மக்களவையில் விவாதிக்கக் கோரி திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஒத்திவைப்பு தீர்மானம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் வழங்கினார். நீட் விலக்கு தொடர்பாக ஏற்கனவே கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இப்போது ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications