அமெரிக்க வேலையை தூக்கி போட்டுவிட்டு- விவசாயிகளுக்கு இலவசமாக மருத்துவம்.. இந்த மனசுதான் சார் கடவுள்
டெல்லி: அமெரிக்காவுக்கு திரும்பும் தனது பயணத்தை ரத்து செய்துள்ள ஸ்வைமன் சிங் என்ற மருத்துவர், தலைநகரில் போராடும் விவசாயிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வருகிறார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தலைநகரில் நடைபெற்று வரும் போராட்டம் மூன்று மாதங்களை நிறைவு செய்துள்ளது. விவசாய சட்டங்கள் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்பதில் விவசாயிகள் திட்டவட்டமாக உள்ளனர்.
நீண்ட நாட்களாகப் போராட்டம் நடைபெற்று வருவதால், விவசாயிகள் தங்க ஏதுவாக கூடாரங்கள் அமைக்கப்பட்டன. அதேபோல கோடைக் காலத்திலிருந்து தப்பிக்கக் கூடாரங்களில் ஏசிகளையும் விவசாயிகள் அமைத்து வருகின்றனர்.
அலெக்ஸி நவல்னி விஷ விவகாரம்: ரஷ்யா மீது முதல் பொருளாதார தடை விதித்த அமெரிக்கா
மருத்துவ முகாம்
அதேபோல போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் பெரும்பாலானோர் 50 வயதைக் கடந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு அடிக்கடி மருத்துவ உதவிகளும் தேவைப்படுகிறது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஸ்வைமன் சிங் என்ற மருத்துவர், போராட்ட களத்திலேயே மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறார். கடந்த மூன்று மாதங்களாக, போராட்ட களத்தில் உள்ள இவரது முகாமில் தான் விவசாயிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க மருத்துவர்
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் இதயநோய் சிறப்பு மருத்துவராக ஸ்வைமன் சிங் பணியாற்றி வந்தார். அவர் மூன்று மாதங்களுக்கு முன்னரே, அமெரிக்கா திரும்ப வேண்டி இருந்தது. இருப்பினும், விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் தனது அமெரிக்க வேலையை ராஜினாமா செய்துவிட்டு, போராடும் விவசாயிகளுக்குக் கடந்த மூன்று மாதங்களாக இலவசமாக மருத்தும் பார்த்து வருகிறார்.
விவசாயிகளின் லட்சியம்
இது குறித்து ஸ்வைமன் சிங் கூறுகையில், "கடந்த சில மாதங்களுக்கு முன் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால், அவருக்கு மருத்துவம் பார்க்க என்னை அழைத்தனர். இங்கு வந்து விவசாயிகளின் நிலைமை பார்த்ததும் எனக்கு நிறைய விஷயங்கள் புரிந்தது. எதுவும் இல்லாமல் லட்சியத்துடன் விவசாயிகள் போராடுகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் நான் இந்த முகாமை அமைத்தேன்" என்றார்.
24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ முகாம்
திக்ரி போராட்ட களத்தில் செயல்படும் இந்த மருத்துவ முகாம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. விவசாயிகள் தவிர அங்குள்ள போலீசார், சிஆர்பிஎஃப் வீரர்கள். உள்ளூர் மக்கள் என அனைவரும் இங்கு தான் மருத்துவம் பார்க்கின்றனர். தினசரி 4,000 முதல் 6,000 பேருக்கு இங்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. ஸ்வைமன் சிங் தவிர மேலும், சில மருத்துவர்களும் செவிலியர்களும் இங்கு பணிபுரிகின்றனர். அவர்களுக்கான ஊதியத்தையும் ஸ்வைமன் சிங்கே வழங்குகிறார்.