புதிய அணையை விடுங்க.. முதலில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பிரச்சினையை தீருங்க.. உச்சநீதிமன்றம்
டெல்லி: முல்லைப் பெரியாற்றில் புதிய அணை அமைப்பது குறித்து இப்போது யாரும் பேச வேண்டாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் அணையின் உறுதி குறித்து விமர்சனம் செய்து வரும் கேரளா அரசு 142 அடி தண்ணீர் வரை தேக்க முடியாது என்று கூறி வருகிறது. ஆனால், தமிழக அரசு 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கும் முடிவில் பிடிவாதமாக இருந்து வருகிறது.
இதற்கிடையே, பருவமழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க, 139 அடி நிரம்பியதும் தமிழக அதிகாரிகள் அனுமதியுடன் கேரள அரசு அணையை திறந்தது. தமிழக அதிகாரிகள் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லைப் பெரியாது அணைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்தநிலையில் அணையை பலப்படுத்தவும், பராமரிப்பு பணிகளுக்கு மரங்களை வெட்டவும் அனுமதி கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என கேரள அரசு, சட்டசபையில் தெரிவித்துள்ளது. இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முரணானது என்றும் நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிப்பதாகும் என்றும் தமிழக அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது "முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படுவதில்லை. மேற்பார்வை குழு பரிந்துரைகளும் பின்பற்றப்படுவதில்லை" தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை அமைப்பது குறித்து இப்போது யாரும் பேச வேண்டாம் . முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்துக்கு முதலில் தீர்வு காண்போம்