வன்முறைக்கு எதிரானது இந்துத்துவா.. முஸ்லீம்கள் இங்கு வாழக்கூடாது என்பவன் இந்துவே இல்லை.. மோகன் பகவத்
டெல்லி: அனைத்து இந்தியர்களின் டிஎன்ஏ-வும் ஒன்று தான் என்று கூறியுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இஸ்லாமியர்கள் இங்கு வாழக்கூடாது என்று கூறுபவர்கள் உண்மையான இந்துக்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Recommended Video
நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மாட்டிறைச்சி வைத்திருப்பதாகக் கூறி நாட்டில் சிலர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், நாட்டில் அனைத்து இந்துக்களின் டிஎன்ஏவும் ஒன்று என்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்துபவர்கள் இந்தத்துவாவுக்கு எதிராக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்துவே இல்லை
ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிறுபான்மை பிரிவான முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் காஜியாபாத்தில் 'இந்துஸ்தான் ஃபஸ்ட்' என் தலைப்பில் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத், "இஸ்லாமியர்கள் யாரும் இங்கு வாழக் கூடாது என்று சொல்லும் இந்து உண்மையில் இந்துவே இல்லை. நாட்டில் ஒற்றுமை இல்லாமல் வளர்ச்சி இல்லை. நமது முன்னோர்கள் வலியுறுத்தியதைப் போல தேசியவாதத்தின் அடிப்படையில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

இந்துத்துவாவுக்கு எதிரானவர்கள்
பசு நமக்குப் புனிதமான ஒரு விலங்கு தான். ஆனால், அதற்காக நாம் யார் மீதும் தாக்குதல் நடத்தக் கூடாது. இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுபவர்கள் எல்லாம் இந்துத்துவாவுக்கு எதிரானவர்கள். சட்டத்தை மீறுபவர்களை சட்டப்படிதான் நாம் தண்டிக்க வேண்டும். அதேநேரம் சில நேரங்களில் இந்துக்கள் தாக்குதல் நடத்தியதாகப் போலி புகார்கள் வந்துள்ளதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

மோதல் கூடாது
இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே இருக்கும் சிக்கலை நாம் பேசி தான் சரி செய்ய வேண்டும். மோதல்கள் மூலம் பிரச்சினையைச் சரி செய்ய முடியாது. இந்து - முஸ்லீம் ஒற்றுமை புரியாத ஒன்று என்றெல்லாம் இல்லை. நாட்டிலுள்ள அனைத்து இந்தியர்களின் டிஎன்ஏ-க்களும் ஒன்றுதான். நாம் ஜனநாயகமான ஒரு நாட்டில் வாழ்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இந்துக்களின் ஆதிக்கமும் கூடாது.
இங்கு இந்துக்களின் ஆதிக்கமும் இருக்கக் கூடாது. இஸ்லாமியர்களின் ஆதிக்கமும் இருக்கக் கூடாது. இந்தியாவில் இந்தியர்களின் ஆதிக்கம் தான் இருக்க வேண்டும். சில விஷயங்களில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாம் அனைவரும் சமூகத்தின் ஒரு பகுதி தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இஸ்லாமியர்கள் ஆபத்தில் இல்லை
அரசியலால் மக்களை ஒன்றிணைக்க முடியாது, அது மக்களைப் பிளவுபடுத்தவே செய்யும். இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆபத்தில் உள்ளனர் என்ற போலியான பிம்பத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று நாட்டிலுள்ள இஸ்லாமியர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இந்திய அரசியலமைப்பும் சரி மக்களும் சரி ஆதிக்கத்திற்கு எதிராகவே உள்ளனர். நானேகூட ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராகப் பேசினால், எந்தவொரு இந்துவும் எனக்கு ஆதரவு தர மாட்டார்.

நாட்டில் சகிப்புத்தன்மை
நாம் நாட்டின் முன்னோர்கள் காலத்தில் இருந்தே சகிப்புத்தன்மை அதிகமாக உள்ளது. அதை நாம் மறந்துவிடக் கூடாது. நான் இந்த நிகழ்ச்சியில் எனது இமேஜ் கருதியோ இல்லது அரசியலுக்காகவே கலந்து கொள்ளவில்லை. சங்க் என்பது அரசியல் கட்சி இல்லை. நாட்டை வலுப்படுத்த தேவையான அனைத்து விஷயங்களையும் நாங்கள் தொடர்ந்து செய்வோம்" என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications