‛வரப்போகும் உண்மை’’.. ஜாபர் சாதிக் கூட்டாளி சதாவை கஸ்டடியில் எடுத்த என்சிபி.. விடாத அதிகாரிகள்
டெல்லி: ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவரது கூட்டாளி சதாவையும் நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னையில் அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் தான் சதாவை இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க தொடங்கி உள்ளனர்.
டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த மாதம் போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் (என்சிபி) அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த குடோனில் இருந்து போதைப்பொருள் தயாரிக்கப்படும் சூடோபெட்ரின் எனும் பொருள் வெளிநாடுகளுக்கு அனுப்புவது தெரியவந்தது.

இதையடுத்து சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக் குமார் ஆகிய 3 பேரை கைது செய்யப்பட்டனர். மேலும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய நபரின் பெயர் ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது.
சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் திமுகவில் இருந்ததும் தெரியவந்தது. அவர் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்தார். இதையடுத்து ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் தலைமைறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கடந்த 9 ம் தேதி ராஜஸ்தானில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இவரை 7 நாள் காவலில் வைத்து என்சிபி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதற்கிடையே தான் ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான திருச்சியைச் சேர்ந்த சதா என்கிற சதானந்தம் (50) நேற்று சென்னை தேனாம்பேட்டையில் வைத்து கைது செய்ப்பட்டார். இவர் சென்னையில் ஜாபர் சாதிக்கின் குடோனை நிர்வகித்து வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் ஜாபர் சாதிக் சென்னையில் போதைப் பொருள் கடத்துவதற்கு இவர்தான் உறுதுணையாக இருந்ததாகவும், போதைப் பொருட்களை உணவு பொருட்களுடன் கலப்படம் செய்வது மற்றும் பேக் செய்வதில் இவர் கை தேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 2013ல் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதும், அதன்பிறகு அவர் வெளியே வந்த பிறகு ஜாபர் சாதிக்குடன் சேர்ந்து போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சதாவை டெல்லி அழைத்து சென்றனர். டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் சதாவை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்தனர். இன்று அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சதாவை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து சதாவை டெல்லி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகள் கஸ்டடியில் எடுத்து தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். இவரிடம் நாளை வரை விசாரணை நடைபெற உள்ளது.
தற்போது ஜாபர் சாதிக்கையும் அதிகாரிகள் டெல்லி போதைப்பொருள் கடத்தல் பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் சதாவையும் அதிகாரிகள் அங்கு அழைத்து சென்றுள்ளதால் வழக்கில் பல முக்கிய உண்மைகள் வெளியாகலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications