குஜராத் கலவரம் பற்றி அமித் ஷா பிரச்சாரம் செய்ததில் தப்பு இல்லை.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
டெல்லி: குஜராத் கலவரக்காரர்களுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு சர்ச்சையாகிய நிலையில், அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமித் ஷாவின் மேற்கண்ட பேச்சு, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாக பெரும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தேர்தல் ஆணையம் இப்படியொரு பதிலை கூறியிருக்கிறது.
தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு ஒருதலைபட்சமாக இருப்பதாக எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.
குஜராத் இமாலய வெற்றி.. பாஜக நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு.. மோடிக்கு வாழ்த்துச் சொன்ன ஓபிஎஸ், ஈபிஎஸ்!
நாட்டையே உலுக்கிய கலவரம்
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி கோத்ரா எனுமிடத்தில் ஒரு கும்பல் ரயிலுக்கு தீ வைத்தது. இதில் அயோத்தி சென்று திரும்பிக் கொண்டிருந்த 59 கரசேவகர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கொந்தளிப்பால் குஜராத் முழுவதும் பயங்கர மதக்கலவரம் மூண்டது. இந்த கலவரத்தில் 1,200-க்கும் மேற்பட்டார் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுபான்மையினர் ஆவர். இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டது. குறிப்பாக, அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, அமைச்சராக இருந்த அமித் ஷா ஆகியோர் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட பிரதமர் மோடி, அமித் ஷா உட்பட பெரும்பாலானோர் விடுதலை செய்யப்பட்டனர்.
அமித் ஷா பேச்சால் சர்ச்சை
இந்த சூழலில், சமீபத்தில் குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு திரட்டினார். அப்போது அவர், "குஜராத் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சரியான பாடம் புகப்பட்டுள்ளது" என்று கூறினார். அமித் ஷாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்கும், விமர்சனங்களுக்கும் வித்திட்டது. குறிப்பிட்ட சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களே கலவரத்தில் ஈடுபட்டது போலவும், அவர்களுக்கு பாடம் புகட்டப்பட்டது போலவும் அமித் ஷா பேசியதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தன.
தேர்தல் ஆணையத்தில் புகார்
இந்நிலையில், அமித் ஷாவின் இந்த பேச்சு இரு மதத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் உள்ளதாகவும் கூறி இந்திய தேர்தல் ஆணையத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சர்மா என்பவர் புகார் அளித்தார். ஆனால், குஜராத் தேர்தல் முடிவடையும் வரை இந்த புகாரை தேர்தல் ஆணையம் விசாரிக்கவில்லை. இதனிடையே, குஜராத் தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த புகார் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையம் அளித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"எந்த தவறும் இல்லை"
இதுதொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், "அமிஷ் ஷாவின் பேச்சு தொடர்பாக குஜராத் தேர்தல் அலுவலரிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டது. மேலும், அவரது பேச்சு அடங்கிய வீடியோவும் ஆய்வு செய்யப்பட்டது. அதில், கலவரத்தில் ஈடுபட்ட "சமூக விரோதிகளுக்கு" பாடம் புகட்டப்பட்டதாகவே கூறுகிறார். எந்த மதத்தையும் அவர் குறிப்பிடவில்லை. அதனால் அவரது பேச்சில் எந்த தவறையும் தேர்தல் ஆணையம் கண்டுபிடிக்கவில்லை என அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.