வடமாநிலங்களை கொளுத்தும் வெயில்! வாக்காளர்களுக்கு சிறப்பு வசதி! அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
டெல்லி: நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்று, 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் வடமாநிலங்களில் வெப்ப அலை தீவிரமடைந்துள்ளதால், வாக்காளர்களை பாதுகாக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

கடைசியாக பீகார் 5 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் 1, ஜார்க்கண்ட் 3, லடாக் 1, மகாராஷ்டிரா 13, ஒடிசா 5, உ.பி. 14, மே. வங்கம் 7 என 6 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு 5ம் கட்டமாக மே 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநில வாரியாக பார்த்தால், பீகாரில் வால்மீகி நகர், பஸ்சிம் சம்பரன், பூர்வி சம்பாரண், ஷியோஹர், வைஷாலி, கோபால்கஞ்ச், சிவன், மகாராஜ்கஞ்ச் என 8 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் அம்பாலா, குருக்ஷேத்ரா, சிர்சா, ஹிசார், கர்னால், சோனிபட், ரோஹ்தக், பிவானி-மகேந்திரகர், குர்கான், ஃபரிதாபாத் என 10 தொகுதிகளுக்கும்,
ஜார்கண்ட்டில் கிரிதிஹ், தன்பாத், ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் என 4 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் சம்பல்பூர், கியோஞ்சர், தேன்கனல், கட்டாக், பூரி, புவனேஸ்வர் என 6 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் சுல்தான்பூர், பிரதாப்கர், புல்பூர், அலகாபாத், அம்பேத்கர் நகர், ஷ்ரவஸ்தி, டோமரியகஞ்ச், பஸ்தி, சந்த் கபீர் நகர், லால்கஞ்ச், அஸம்கர், ஜான்பூர், மச்லிஷாஹர், பதோஹி என 14 தொகுதிகளுக்கும்
மேற்கு வங்கத்தில் தம்லுக், காந்தி, கட்டல், ஜார்கிராம், மேதினிபூர், புருலியா, பாங்குரா, பிஷ்ணுபூர் என 8 தொகுதிகளுக்கும், டெல்லியில் சாந்தினி சௌக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புது டெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி என 7 தொகுகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக்-ரஜௌரி தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. 58 லோக்சபா தொகுதிகளில் மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் வாக்களிக்க வரும் வாக்காளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தேர்தல் அலுவலர்களுக்கு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தென் மாநிலங்களில் கோடை மழை தீவிரமமைடந்திருக்கிறது. ஆனால், வட மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. டெல்லியில் மக்கள் வெப்ப அலையால் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாநிலங்களில் வெயில் 50 டிகிரி செல்சியஸை தாண்டும் என்று வானிலை மையம் எச்சரித்திருக்கிறது.
எனவே, வாக்களிக்க வருபவர்களுக்கு குடிநீர், கழிப்பறை என அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இது தவிர வானிலைக்கு ஏற்ப சிறப்பு வசதிகள் செய்ய வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications