வாக்குப் பதிவு இயந்திரம், வாக்குப் பதிவு எண்ணிக்கையில் மோசடியே இல்லை- தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
டெல்லி: நாட்டில் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் எந்த ஒரு முறைகேடும் செய்துவிட முடியாது; அதேபோல தேர்தல்களின் போது பதிவாகும் வாக்கு எண்ணிக்கையிலும் எந்த மோசடியும் செய்துவிட முடியாது; ஆகையால் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்தி தேர்தல் நடத்துவது என்பது சாத்தியமற்றது என இந்தியத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லி யூனியன் சட்டசபைக்கு பிப்வரி 5-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போதைய மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பயன்பாட்டில் எந்த குறைபாடுமே இல்லை. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யவும் முடியாது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகள் செல்லக் கூடியதாகவே இருக்கின்றன. உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் இதனை உறுதிப்படுத்தி இருக்கின்றன.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்துவிட முடியும் என்பது அடிப்படை ஆதாரமற்றது. மின்னணு வாக்குப் பதிவின் நம்பகத்தன்மை மிகவும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆகையால் மீண்டும் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்துவது என்பது தேவையில்லாதது.
அதேபோல வாக்காளர்கள் பட்டியல் சேர்ப்பில் எந்த முறைகேடும் நடைபெறுவதும் இல்லை. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு என்பது 79 படிநிலைகளைக் கொண்டதாக இருக்கிறது. இந்திய வாக்காளர்கள் மிகவும் விழிப்புணர்வு கொண்டவர்கள். வாக்காளர்களை பார்ம் 7 இல்லாமல் எவர் ஒருவரையும் நீக்கிவிட முடியாது. வாக்காளர் பட்டியல் என்பது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படக் கூடியதுதான்.
மேலும் வாக்குப் பதிவு எண்ணிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. பதிவான வாக்குகளில் எந்த ஒரு வகையிலும் முறைகேடு செய்துவிடவே முடியாது. வாக்குப் பதிவு எண்ணிக்கையில் நிச்சயம் முறைகேடுகள் எதுவும் நடைபெறவும் இல்லை. இவ்வாறு தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
டெல்லி சட்டசபை, ஈரோடு கிழக்கு தேர்தல் தேதி அறிவிப்பு
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ந் தேதி தேர்தல் நடைபெறும்; பிப்ரவரி 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications