இலவச வாக்குறுதிக்கு தடை விதிக்க முடியாது.. மக்கள் முடிவு செய்யட்டும்! கோர்டில் தேர்தல் ஆணையம் பதில்
டெல்லி: தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் குறித்து அறிவிக்கத் தடை விதிக்க தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது
சமீபத்தில் உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்தல் காலத்தில் பல்வேறு கட்சிகளும் பல தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசின.
பஞ்சாபில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல இலவச திட்டங்கள் இந்த தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்பட்டது.

முடக்க வேண்டும்
இந்தச் சூழலில் கடந்த ஜனவரி மாதம் தேர்தல் காலத்தில் அறிவிக்கப்படும் இலவசங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்றால் இதைத் தருவோம், அதைத் தருவோம் என இலவசங்கள் குறித்து அரசியல் கட்சிகள் அள்ளி வீசும் அறிவிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்படி இலவசங்களை அள்ளிவிடும் அரசியல் கட்சிகளின் தேர்தல் சின்னத்தை முடக்கத் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

குழப்பும் நடவடிக்கை
தேர்தல் காலங்களில் மக்களைக் குழப்பும் வகையிலும் அரசியல் சாசனத்தை மீறும் வகையிலும் உள்ளதால் இதுபோன்ற நடவடிக்கைகளை முழுவதுமாக தடுக்க வேண்டும் என்றும் இது குறித்துத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தேர்தலைக் கருத்தில் கொண்டு வெளியிடப்படும் இந்த அறிவிப்புகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் மட்டுமல்ல, அரசியலமைப்பின் உணர்வையும் காயப்படுத்துவதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதுவும் ஆட்சியில் தொடர வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போலத் தான் என்று குறிப்பிட்டிருந்தார்.

தேர்தல் ஆணையம் பதில்
இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் இப்போது உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. அதில் "வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கும் போது எடுக்கக்கூடிய கொள்கை முடிவுகளைத் தேர்தல் ஆணையத்தால் கட்டுப்படுத்த முடியாது. தெளிவான சட்டங்கள் இல்லாமல் இதுபோன்ற நடவடிக்கை எடுப்பது அதிகாரங்களை மீறுவதாக இருக்கும். தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ இலவசங்கள் குறித்து அறிவிப்பு என்பது ஒரு அரசியல் கட்சியின் கொள்கை முடிவாகும்.

மக்கள் முடிவு செய்யட்டும்
அத்தகைய கொள்கைகள் நிதி ரீதியாகச் சாத்தியமானதா அல்லது மாநிலத்தின் பொருளாதாரத்தைப் பாதிக்குமா என்பதை வாக்காளர்களாலே பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும். 2013ஆம் ஆண்டு நீதிபதி எஸ்.சுப்பிரமணியம் பாலாஜி அளித்த தீர்ப்பின்படி இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை ஊழல் நடைமுறையாகக் கருத முடியாது என்று கூறி இருந்தார்" என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

நீதிமன்றம்
இருப்பினும், அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள், தேர்தல் தூய்மையையும், பாதிப்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், இலவசங்களின் அச்சுறுத்தலைக் கையாள சட்டம் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த பிரச்சினையில் ஒருமித்த முடிவை எட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரத்து செய்ய முடியாது
2013 தீர்ப்பைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தியதாகவும், ஆனால் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மூன்று காரணங்களை வகுத்துள்ளதாகவும் அதில் இலவசங்கள் இல்லை என்பதால் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications