குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர் விவரங்களை.. நியூஸ் பேப்பரில் வெளியிடனும்- தேர்தல் ஆணையர்
டெல்லி: எதிர் வரும் லோக்சபா தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்புகளை, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், குற்றப் பின்னணி வேட்பாளர்கள் குறித்த விவரங்களை நாளிதழ்களில் வெளியிட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்தியாவின் லோக்சபா தேர்தல் குறித்த தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்,

"நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26ம் தேியும், மூன்றாம் கட்டம் மே 7ம் தேதியும், 4ம் கட்டம் மே 13ம் தேதியும், 5ம் கட்டம் மே 20, 6ம் கட்டம் மே 25, 7ம் கட்டம் ஜூன் 1ம் தேதியும் நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி வாக்காளர்கள் தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டின் வாக்காளர்களை விட 6 சதவிகிதம் அதிகமாகும். 49.7 கோடி ஆண் வாக்காளர்கள், 47 கோடி பெண் வாக்காளர்கள் இந்த லோக்சபா தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
மொத்த வாக்காளர்களில் 19.74 கோடி பேர் இளைஞர்களாக இருக்கின்றனர். இதில் 1.8 கோடி இளைஞர்கள் முதல் தலைமுறை வாக்காளர்களாவார்கள். தேர்தலுக்காக 1.50 கோடி தேர்தல் பணியாளர்கள் பணியாற்ற இருக்கின்றனர். வாக்குப்பதிவுக்காக 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல வாக்காளர்களுக்காக ஒவ்வொரு மையத்திலும், குடிநீர், கழிவறை, சக்கர நாற்காலி, உதவி மையம், போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்வது போன்ற வசதிகள் செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.
அதேபோல தேர்தலின் போது பொதுவாக எதிர்கொள்ளப்படும் 4 பிரச்னைகள் குறித்து விளக்கமளித்தார். முதலாவதாக பண பலம் குறித்து பேசிய அவர், வாக்காளர்களுக்கு, வேட்பாளர்கள் பணத்தை விநியோகிப்பதை தடுக்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை குறித்து விளக்கமளித்துள்ளார். கடந்த 2017-2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட பணத்தை விட 2022-2023ம் ஆண்டு நடைபெற்ற 11 மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது 835% அதிகமான பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
இரண்டாவது பிரச்சனையாக, ஆள் பலம் எனும் பிரிவில், பூத் கேப்சர், தேர்தலை முடக்கும் வகையில் பிரிவினை சக்திகளை மேற்கொள்ளும் தாக்குதல் சம்பவங்களை தடுக்க எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவரித்துள்ளார். தேசிய எல்லை, மாநில எல்லைகளில் போதுமான அளவு துணை ராணுவப்படைகளை வைத்திருப்பது, செக்போஸ்ட்களை அமைத்து சோதனை நடத்துவது, 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை, போதுமான அளவு ஆயுத கையிருப்பு, ட்ரோன்களை கொண்டு கண்காணித்தல் ஆகியவை திட்டமிடப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
மூன்றாவதாக வதந்தி பரப்பப்படுதல் குறித்து பேசிய ராஜீவ் குமார், "அரசியல் கட்சிகள் தங்கள் சோஷியல் மீடியா பதிவுகள் குறித்து கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது உரிய சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வதந்திகள், சட்டத்திற்கு புறம்பான தகவல்கள் நீக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
இறுதியாக விதிமீறல் குறித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர், "மத ரீதியிலான, சாதி ரீதியிலான அல்லது தனிப்பட்ட விமர்சனங்களை தேர்தல் பிரசாரமாக மாற்றக்கூடாது. பிரசாரத்தில் குழந்தைகளை பயன்படுத்த கூடாது" என்று கூறியுள்ளார்.
இது தவிர குற்றப் பின்னணி வேட்பாளர்கள் குறித்த விவரங்களை நாளிதழ்களில் வெளியிட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications