தேர்தல் பத்திரம், 370-வது பிரிவு ரத்து வழக்குகள்..தலைமை நீதிபதியாகும் சஞ்சீவ் கண்ணா தீர்ப்புகள்!
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை தற்போதைய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் சஞ்சீவ் கண்ணாவின் பெயரை தலைமை நீதிபதி பதவிக்கு தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் பரிந்துரைத்திருப்பதை மத்திய அரசு ஏற்குமா? இல்லையா? என்பது எதிர்பார்ப்பு.
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகும் சஞ்சீவ் கண்ணா, இதுவரை எந்த உயர்நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக பதவி வகிக்காதவர். தற்போது சீனியாரிட்டி அடிப்படையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் சஞ்சீவ் கண்ணா.

2005-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக முதலில் நியமிக்கப்பட்டார் சஞ்சீவ் கண்ணா. பின்னர் 2006-ம் ஆண்டு பிப்ரவரி 20-ல் நிரந்தர நீதிபதியாக நியமனம் பெற்றார். 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரையின் அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தால் நியமிக்கப்பட்டார். தற்போது சீனியாரிட்டி படி உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
தலைமை நீதிபதியாகும் சஞ்சீவ் கண்ணா இதுவரை மொத்தம் 456 அமர்வ்களில் நீதிபதியாக இடம் பெற்று 117 தீர்ப்புகளை வழங்கி உள்ளார். சஞ்சீவ் கண்ணா மிக அதிகமாக 24% தீர்ப்புகள் கிரிமினல் வழக்குகளில் வழங்கி இருக்கிறார். 10% சிவில் வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். 8% அரசியல் சாசனம் சார்ந்த வழக்குகளில் தீர்ப்பளித்திருக்கிறார் சஞ்சீவ் கண்ணா.
வாக்குப் பதிவு இயந்திர ஒப்புகைச் சீட்டு வழக்கு: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் எனப்படும் VVPAT Voter-Verified Paper Audit Trail- ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் அதாவது அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று Democratic Reforms தாக்கல் செய்திருந்த வழக்கை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெஞ்ச் விசாரித்தது. அத்துடன் வாக்குச் சீட்டு முறையையே மீண்டும் நடைமுறைப்படுத்தவும் கோரப்பட்டிருந்தது. அனைத்து மனுக்களையும் விசாரித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான பெஞ்ச், ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணக் கோரிய மனுக்களையும் வாக்குச் சீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரிய மனுவையும் டிஸ்மிஸ் செய்து தீர்ப்பளித்தது.
தேர்தல் பத்திர வழக்கு: மத்திய பாஜக அரசு 2018-ல் அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரம் திட்டம் முறையே செல்லாது என கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அதிரடியாக தீர்ப்பளித்தது. இந்த அரசியல் சாசன பெஞ்ச்சில் நீதிபதி சஞ்சீவ் கண்ணாவும் இடம் பெற்றிருந்தார்.
ஜம்மு காஷ்மீர் 370-வது பிரிவு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்துஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொன்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்தது. இந்த வழக்கில் 370-வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை வழங்கிய அரசியல் சாசன பெஞ்ச்சில் சஞ்சீவ் கண்ணா இடம் பெற்றிருந்தார்.
விவாகரத்து வழக்கு: அரசியல் சாசன சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றம் தமது அதிகாரத்தை பயன்படுத்து விவாகரத்து வழங்கக் கோரி 2014-ம் ஆண்டு சத்தீஸ்கரைச் சேர்ந்த ஷில்பா சைலேஷ் - வருண் ஸ்ரீனிவாசன் தம்பதி மனு தாக்கல் செய்தனர். இதை முதலில் நீதிபதிகள் சிவ கீர்த்தி சிங், ஆர்.பானுமதி பெஞ்ச் விசாரித்தது. பின்னர் 2016-ம் ஆண்டு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச்சுக்கு மாற்றப்பட்டது. நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, அபய் எஸ் ஓகா, விக்ரம்நாத், .கே.மகேஷ்வரி ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தமக்கான அதிகாரத்தை பயன்படுத்தி சத்தீஸ்கர் தம்பதியினருக்கு விவகாரத்து வழங்கியது.
தகவல் அறியும் உரிமை சட்டமும் உச்சநீதிமன்றமும்: உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள் ஹெச்.எல். தத்து, ஏ.கே. கங்குலி, ஆர்.எம்.லோதா நியமனம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை செயல்பாட்டாளர் சுபாஷ் சந்திர அகர்வால் கோரிய தகவல்களை உச்சநீதிமன்றத்தில் உள்ள மத்திய தகவல் அலுவலகம் வழங்க மறுத்தது. ஆனால் மேல்முறையீட்டில் உரிய தகவல்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த 3 நீதிபதிகள் நியமனத்துக்கு பிரதமர் அலுவலகம் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியான நிலையில் இந்த தகவல்கள் கோரப்பட்டன. இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. இந்த பெஞ்ச்சில் நீதிபதிகள் என்.வி. ரமணா, டி.ஒய். சந்திரசூட், தீபக் குப்தா,சஞ்சீவ் கண்ணா இடம்பெற்றிருந்தனர். இவ்வழக்கில்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வரும் என தீர்ப்பளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications