வெளிநாடு நிதி பெற்றதில் முறைகேடு- பிபிசிக்கு எதிராக அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு
டெல்லி: வெளிநாட்டு நிதி பெற்றதில் முறைகேடு செய்ததாக சர்வதேச ஊடகமான பிபிசி நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
2002-ம் ஆண்டு குஜராத் மத வன்முறைகள் தொடர்பாக அண்மையில் பிபிசி ஆவணப்படம் வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில் அப்போதைய குஜராத் முதல்வரான பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன. இது மிகப் பெரிய சர்ச்சையானது.
இதனைத் தொடர்ந்து பிபிசி ஆவணப்படத்தை அனைத்து தளங்களிலும் முடக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் ஆய்வு நடத்தின.

தற்போது வெளிநாட்டு நிதியைப் பெற்றதில் முறைகேடு செய்துள்ளதாக பிபிசி நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கப் பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது. நேரடி அன்னிய முதலீட்டு சட்டப்படி அனுமதி பெறாமல் நிதி பெற்று இருப்பதாக பிபிசி நிறுவனம் மீது அமலாக்கப் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக பிபிசி பணியாளர்களுக்கும் அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.
பின்னணி என்ன?: 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் கரசேவர்கள் எரிந்து கருகினர். இதனையடுத்து குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மிகப் பெரிய அளவில் வெடித்தது. இந்த குஜராத் மத மோதல்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
குஜராத் வன்முறையின் போது முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி. அப்போது மாநில அமைச்சராக இருந்தவர் தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷா. குஜராத் மத வன்முறைகளின் போது போலீசாரை செயல்படவிடாமல் தடுத்து இருந்தார் மோடி என்பது நீண்டகால குற்றச்சாட்டு. ஆனால் மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் நீதிமன்றங்கள் அவரை விடுதலை செய்தது. குஜராத் மத மோதல்கள் தொடர்பான பல வழக்குகள் இன்னமும் நடைபெற்றும் வருகின்றன.
இந்நிலையில் பிபிசி ஊடகமானது, 2002-ம் ஆண்டு குஜராத் படுகொலைகள் தொடர்பாக 2 பாகங்களாக ஆவணப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டது. இதிலும் பிரதமராக உள்ள மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது சர்ச்சையானது. இந்த ஆவணப்படத்துக்கு பாஜகவினர் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேநேரத்தில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் இந்த ஆவணப்படத்தை பல மாநிலங்களில் வெளியிட்டு ஆதரவு தந்தன. இன்னொரு பக்கம் சமூக வலைதளங்களில் பிபிசி ஆவணப்படங்கள் வெளியிடப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டன. மத்திய அரசு நேரடியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டது பெரும் சர்ச்சையானது.
அத்துடன் பிபிசியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனைக்கு பதில் ஆய்வு நடத்தி இருந்தனர். வெளிநாட்டு நிதி விவகாரங்கள் தொடர்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வைத் தொடர்ந்து தற்போது அமலாக்கப் பிரிவானது பிபிசி மீது வெளிநாட்டு நிதி பெற்றதில் முறைகேடு என வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications