குழந்தைகளுக்கு இப்போது கொரோனா தடுப்பூசி கிடையாது.. மத்திய அரசு கூறிவிட்டது.. நிபுணர் தகவல்!
டெல்லி: கொரோனாவுக்கு எதிராக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவேண்டிய அவசியம் இல்லை என இந்தியாவின் நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு நிபுணர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் புதிய உருமாற்றமான ஓமிக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சார முறைகள் மூலம் மக்களை தடுப்பூசி செலுத்த ஊக்குவித்து வருகிறது.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் எனும் 3வது டோஸ் தடுப்பூசி செலுத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது பற்றி அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

மத்திய அரசு ஆய்வு
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாத நிலையில், அக்டோபரில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் அவசரப்பட வேண்டாம் என்று மூத்த அதிகாரிகளிடம் கூறியதாக தகவல் வெளியாகியது.

முழுமையான சர்வே
வளர்ந்த நாடுகளில் கூட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் மெதுவாக இருப்பதற்கான காரணங்களை ஆய்வு செய்யும்படி அமைச்சர் மாண்டவியா அதிகாரிகளை கேட்டுக் கொண்ட நிலையில், இந்தியாவில் குழந்தைகளுக்கான கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை தொடங்குவதற்கான இறுதித் திட்டத்தைச் சமர்ப்பிக்கும் முன் ஒரு முழுமையான சர்வே எடுக்குமாறு நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

குழந்தைகள் மரணம்
இக்குழு நாடு முழுவதும் கொரோனா தரவுகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், கோவிட்-19 காரணமாக இந்தியாவில் குறிப்பிடத்தக்க இறப்புகள் இல்லை எனவும், குறிப்பாக கோவிட்-19 காரணமாக 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஒரு மரணம் கூட இந்தியாவில் பதிவாகவில்லை எனவும், புற்றுநோய், லுகேமியா மற்றும் பிற நோய்களால்தான் குழந்தைகள் இறப்புகள் பதிவானதாக தரவுகள் கிடைத்தது.

தடுப்பூசி தேவையில்லை
இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள இந்தியாவின் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்.டி.ஏ.ஜி.ஐ) உறுப்பினரும், வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி பேராசிரியரும், தொற்றுநோயியல் நிபுணருமான டாக்டர் ஜெயபிரகாஷ் மூலியில் கூறுகையில், இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பாதிப்பின்றி குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள், இப்போது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடக்கூடாது" என்று குழு மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.












Click it and Unblock the Notifications