நாடு முழுவதும் இருந்து.. 40 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி.. ராகேஷ் டிக்கைட் அழைப்பு
காசியாபாத்: விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், தங்களுடன் டிராக்டர் பேரணியில் இணைந்துகொள்ள வேண்டும் என்று விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் கேட்டுக்கொண்டுள்ளார்,
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். கடும் குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுமார் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. மத்திய அரசு விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்பதைத் திட்டவட்டமாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
பழைய டிராக்டர்களுக்கு தடை
இந்நிலையில், காசிப்பூர் போராட்ட களத்தில் பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் 10 ஆண்டுகளுக்கு மேல் பழைய டிராக்டர்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பு ஆணையம் விதித்துள்ள தடை என்பது கவலையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறினார். விவசாய நிலங்களில் ஓடிய டிராக்டர்கள், இனி டெல்லி தேசிய பசுமை தீர்ப்பு ஆணையத்தின் அலுவலகத்தை நோக்கியும் செல்லும் என்றும் அவர் பேசினார். 10 ஆண்டுகளுக்கு மேல் பழைய டிராக்டர்களுக்கு தடை விதிப்பதன் மூலம் காப்ரேட்களுக்கு மத்திய அரசு உதவ முயல்வதாகக் குற்றஞ்சாட்டிய அவர், பழைய டிராக்ரடர்கள் தொடர்ந்து இயங்கும் என்றும் அவை இந்தப் போராட்டங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் என்றும் கூறினார்.
டிராக்டர் பேரணி
விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெறும் டிராக்டர் பேரணிக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அளிக்கும் ஆதரவு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் 20 ஆயிரம் டிராக்டர்கள் பங்கேற்றதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்து 40 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படும் என்றார். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டிராக்டர் பேரணியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
தயாராக இருங்கள்
விவசாயிகள் தங்கள் நிலங்களில் புரட்சிகர கருத்துகளைப் பரப்ப வேண்டும் எனத் தெரிவித்த அவர், காசிப்பூர், சிந்து, திக்ரி எல்லைகளில் நடைபெறும் போராட்டம் அக்டோபர் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனவரி 26ஆம் தேதி நடைபெற்ற குழப்பத்திற்குப் பின் ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச விவசாயிகள் போராட்ட களத்திற்கு வந்ததைப் போல, கிராமங்களில் உள்ள விவசாயிகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் பேசினார். மேலும், போராட்டக்காரர்களுக்கு நீர் வழங்க உள்ளூர் நிர்வாகம் தடை விதித்துள்ளதால் போராட்ட களத்திற்கு வரும் விவசாயிகள் நீரையும் உணவையும் எடுத்து வர வேண்டும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குடியரசு தின டிராக்டர் பேரணி
டெல்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் திடீரென்று குழப்பம் ஏற்பட்டது. போராட்டத்தில் கலந்த சிலர், செங்கோட்டையில் விவசாயிகளுக்கு ஆதரவான கொடியை ஏற்றினர். இந்தக் குழப்பத்தில் போலீஸ் தரப்பில் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து விவசாயிகள் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், காசிப்பூர் போராட்ட களத்திலிருந்து காலி செய்யும்படி விவசாயச் சங்க தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அப்போது அரசு தங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறி விவசாயச் சங்க தலைவர் ரகோஷ் டிக்கைட் கண்ணீர் விட்டார். அதைத்தொடர்ந்து போராட்ட களத்திற்கு ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் படையெடுத்தது குறிப்பிடத்தக்கது.