'சொன்ன வாக்குறுதி எதையும் செயல்படுத்தல'.. மீண்டும் போராட்டத்தில் இறங்கும் விவசாய சங்கங்கள்!
டெல்லி: மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என மீண்டும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக விவசாய சங்கம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சட்டங்களை திரும்பப்பெறக்கோரி சம்யுக்தா கிஷான் மோர்ச்சா தலைமையிலான விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
டெல்லியில் நடந்த இந்தப் போராட்டம் ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. லட்சக்கணகான விவசாயிகள் தலைநகரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய சட்டம்
1. வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, 2020, 2. விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் ஒப்பந்த மசோதா 2020, 3. அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020 என மத்திய அரசு வேளாண் துறை தொடர்பாக கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது.

விவசாயிகள் எதிர்ப்பு
இந்த வேளாண் சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என்று சொல்லி விவசாயிகள் அமைப்பு, இந்த விவசாய சட்டங்களை வாபஸ் பெற சொல்லி தலைநகர் டெல்லியில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு, ஒரு வருடத்துக்கும் மேல் போராட்டத்தை நடத்தினர்.

வாபஸ்
இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற்றது. மேலும் விளை பொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதார விலைக்கு மசோதா கொண்டு வருவது பற்றி குழு அமைக்கப்படும், விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும், மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை மத்திய அமைச்சரவையில் நீக்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்திருந்தது. இதையடுத்து போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர்.

மத்திய அரசு
இந்நிலையில் டெல்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாய் அரங்கில், சம்யுக்தா கிசான் மோர்ச்சா தலைமையிலான விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் விவசாய சங்கங்கள் மத்திய அரசுமீது அதிருப்தியில் இருக்கின்றன.

மீண்டும் போராட்டம்
இதையடுத்து, சம்யுக்தா கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''போராட்டத்தைக் கைவிட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகும் அரசு முக்கிய உத்தரவாதங்களை செயல்படுத்தவில்லை. அதனால் வரும் 21ந் தேதி நாடு தழுவிய போராட்டத்தை நடத்தவுள்ளோம். வரும் ஏப்ரல் 11 முதல் 17 வரை குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாத அளிக்க கோரும் வாரத்தை கடைப்பிடிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது'' என விவசாய சங்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications