விரைவில் வழிக்கு வருவார்கள்... விவசாயிகள் போராட்டம் குறித்து அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
டெல்லி: விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள், அதில் இருக்கும் நன்மைகளைப் புரிந்து கொண்டு சுமூகமான தீர்வுக்கு வருவார்கள் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு மூன்று புதிய விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தது. கார்பரேட்களுக்கு உதவும் வகையில் இருக்கும் இச்சட்டங்கள், விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் தொடங்கி சுமார் 40 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையிலும் கூட, இதுவரை மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே எவ்வித சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை. இதுவரை இரு தரப்பினருக்கும் இடையே ஏழு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
இதில் இலவச மின்சாரம், விவசாய கழிவுகளை எரிப்பது தொடர்பான இரு விஷயங்களில் மட்டுமே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவது, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்டவற்றில் சிக்கல் தொடர்கிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "விவசாயிகளின் நலனை காப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. சட்டங்களை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என இரு தரப்பையும் நாங்கள் சந்திக்கிறோம்.
மோசமாகும் வானிலை... கான்கிரீட் கூடாரம் அமைக்கும் விவசாயிகள்... அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி
தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இந்த விவசாய சட்டங்களின் பின்னணியில் உள்ள கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தச் சட்டங்கள் மூலம் விவசாயிகள் பெறும் நலன்கள் குறித்து அவர்கள் சிந்திக்க வேண்டும். பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் விரைவில் அவர்கள் ஒரு நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
டெல்லியில் தற்போது மிகவும் மோசமான வானிலை நிலவி வருகிறது. ஏற்கனவே, கடும் குளிர் உள்ளிட்ட பல காரணங்களால் டெல்லியில் போராடும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், இன்று மத்திய அரசைக் கண்டித்து நடைபெறவிருந்த டிராக்டர் பேரணியும் மோசமான வானிலை காரணமாக நாளை ஒத்தி வைக்கப்பட்டது.