என்ன ஆனாலும் சரி... வேளாண் சட்டம் வாபஸ் பெறும்வரை போராட்டம் தொடரும்... விவசாயிகள் திட்டவட்டம்!
டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ளது.
மத்திய அரசு வேளாண் சட்டத்தை முழுமையாக திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களை தற்காலிகமாக ஒன்றரை வருடங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், அதன்பிறகு குழு அமைத்து நல்ல முடிவுக்கு வரலாம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் இதை விவசாயிகள் ஏற்க மறுத்துள்ளனர்.
100 நாட்களை கடந்த போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை.
திசைமாறிய டிராக்டர் பேரணி
இதற்கிடையே குடியரசு தினம் அன்று நடைபெற்ற டிராக்டர் பேரணி திசைமாறி வன்முறையாக வெடித்தது. போராட்டக்காரர்கள் கூட்டத்தில் விஷமிகள் புகுந்ததால் போலீசார் தடியடி நடத்தினார்கள். பலர் டெல்லி செங்கோட்டையை சென்று அங்கு காலிஸ்தான் கொடிகளை ஏற்றியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் சில விவசாய சங்கங்கள் போராட்டத்தில் இருந்து விலகின. ஆனாலும் விவசாயிகள் மனம் தளராமல் தொடர்ந்து டெல்லியின் பல எல்லைகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் தொடரும்
மூன்று வேளாண் சட்டங்களை தற்காலிகமாக ஒன்றரை வருடங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், அதன்பிறகு குழு அமைத்து நல்ல முடிவுக்கு வரலாம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் இதை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், 100 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு வேளாண் சட்டத்தை முழுமையாக திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
எந்தமாற்றமும் இல்லை
இது தொடர்பாக குடியரசு தின சம்பவத்துக்கு பிறகு டெல்லியில் போராட்டத்தை முன்னெடுத்த பாரதிய கிஷான் யூனியன் சங்க தலைவர் ராகேஷ் திகைத், போராட்டம் 100 நாட்களை கடந்ததை குறிக்கும் வகையில் முசாபர்நகரில் உள்ள ராம்ராஜ் நகரில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறும் வரை எங்களின் போராட்டம் தொடரும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறினார். மேலும், அங்கு டிராக்டர் பேரணியை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த டிராக்டர் பேரணி உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மாவட்டங்கள் முழுவதும் சென்று மார்ச் 27 அன்று காசிப்பூரில் உள்ள விவசாயிகளின் எதிர்ப்பு இடத்தை அடையும் என்றும் ராகேஷ் திகைத் தெரிவித்தார்.